இரு மாநிலங்களில் கொடி ஏற்றியதில் விதிமீறல் இல்லை; கவர்னர் தமிழிசை பேட்டி
1 min readThere was no irregularity in flag hoisting in both states; Governor Tamil Music Interview
28/1/2022
இரு மாநிலங்களில் தேசியக் கொடி ஏற்றியதில் எவ்வித விதிமீறலும் இல்லை என கவர்னர் தமிழிசை சவுநதரராஜன் கூறினார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேசியக்கொடி
குடியரசு தின விழாவில் தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் தேசியக் கொடி ஏற்றியது சாதனைக்காக அல்ல. இரு மாநில மக்களின் உணர்வுகளையும் நான் மதிக்கிறேன். தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும். எனது தேச பத்தியை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நடந்தது.
இரு மாநிலங்களும் எனக்கு இரு குழந்தைகள் போல். இரு மாநிலத்திற்கும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எனது சிரமங்களையும் பொருட்படுத்தாமல் அவ்வாறு செய்தேன். இதில் விமர்சிக்க ஒன்றும் இல்லை.
குடியரசு தின விழாவில் கவர்னர் கொடி ஏற்றுவது தான் மரபு. இதில் எவ்வித விதி மீறலும் இல்லை. முதல்வரும் அதனை ஒப்புக் கொண்டார். முதல்வர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். இதில் சிலர் அரசியல் செய்கிறார்கள். கவர்னருடன் ஒற்றுமையாக செயல்பட முடியவில்லை என்பதால், கவர்னர்கள் ஒற்றர்களாக செயல்படுவதாக நாராயணசாமி கூறுகிறார்.
சரித்திர முக்கியத்துவம்
இரு மாநிலங்களில் கொடியேற்றியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், தமிழர்கள் சரித்திரம் படைக்க தமிழர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் கவர்னர்கள் உற்ற தோழர்களாக செயல்பட்டுக் கொண்டுள்ளோம்.
சிலரால் இணைந்து செயல்பட முடிவதில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம். நானும் அதனை உணர்ந்துள்ளேன். ஆனால் கவர்னர்கள் நடுநிலையோடு மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டுள்ளோம்.
மக்கள் சேவை
முன்பு கவர்னர்கள் அலுவலகத்திற்குள் இருந்தனர். இப்போது மக்கள் சேவைக்காக வெளியில் வருகின்றனர். இதனை நாம் வரவேற்க வேண்டும். புதுச்சேரியைப் பொறுத்தவரை, நான் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றிக் கொண்டுள்ளேன்.
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை இட ஒதுக்கீடு கொடுத்து நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதால் தாமதமாகிறது. அடிப்படை கட்டமைப்பில் புதுச்சேரியை சிறந்த மாநிலமாக மாற்ற பணியாற்றி வருகிறோம்.
இந்த பட்ஜெட்டிற்கு பிறகு பல நலத்திட்டங்கள் வர வாய்ப்புள்ளது. மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கும்போது சில அடிப்படை வழிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. அதனால் நிவாரணத்தில் சில வேறுபாடுகள் இருக்கலாம். முதல்வர் கூறியது போல் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக மத்திய-மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.