காஷ்மீர் விவகாரத்தில் சர்ச்சை கருத்து: ஹூண்டாய் இந்தியா நிறுவனம் விளக்கம்
1 min readRobbery-tension of Hindu temples in Canada
7.2.2022
காஷ்மீர் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ஹூண்டாய் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஹூண்டாய்
இந்திய கார் சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய். தென்கொரியாவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் உலகம் முழுவதும் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. 1967- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இதன் கிளைகளில் சுமார் 1,20,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சென்னையிலும் இதன் உற்பத்தி நிறுவனம் உள்ளது.
கார் விற்பனையில் இந்தியாவில் மாருதி நிறுவனத்துக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் பாகிஸ்தானிலும் தனது கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி பாகிஸ்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது.
காஷ்மீர் பிரச்சினை
அதில், “காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்கள் தொடர்ந்து வரும் சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பிப்ரவரி 5 ஆம் தேதி பாகிஸ்தான் அரசு காஷ்மீர் ஒற்றுமை தினம் என கடைபிடித்து வருகிறது. இதற்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட பதிவு, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு எதிரான குரல் வலுத்தது.
விளக்கம்
இந்நிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியச் சந்தைக்கு உண்மையாக இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்திற்கு இந்தியா இரண்டாவது வீடு என்றே சொல்வோம். பொறுப்பற்ற முறையி வெளியான கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் கொள்கைக்கு ஏற்ப நாங்கள் இந்தியாவின் இந்திய மக்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அளித்துள்ள விளக்கம் போதுமானதாக இல்லை என சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியங்கா சதுர்வேதி, “ எதற்கு இத்தனை மழுப்பல், நழுவல், கண் துடைப்பு வார்த்தைகள். இவை எல்லாம் தேவையில்லை. நீங்கள் மன்னிப்பு கோருங்கள். மற்றவையெல்லாம் அவசியமற்றது” என்றார்.