மதுரை மாநகராட்சியில் பா.ஜனதா வேட்பாளர்களாக 3 முஸ்லிம்கள் போட்டி
1 min read
3 Muslims contest as BJP candidates in Madurai Corporation
11.2.2022
மதுரை மாநகராட்சியில் பா.ஜனதா வேட்பாளர்களாக 3 முஸ்லிம்கள் போட்டியிடுகிறார்கள்.
மதுரை நகராட்சி
மதுரை மாநராட்சியில் நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 வார்டுகளிலும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது. அவர்களில் 3 பேர் முஸ்லிம் வேட்பாளர்கள் ஆவர்.
அவர்களில் 2 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாநகராட்சி 22-வது வார்டில் போட்டியிடும் காசிபாசையது, பிளாஸ்டிக் மோல்டிங் பிரிவில் பட்டம் பெற்றவர். பாரதிய ஜனதா கட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:-
முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல
பாரத பிரதமர் மோடி மற்றும் தேச வளர்ச்சியின் மீதான கட்சியின் பார்வை, ஆகியவை என்னை கவர்ந்தது. எனவே நான் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறேன். பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல.
நான் கடந்த 4 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். எனக்கு இதுவரை எந்த பிரச்சனைகளும் வரவில்லை. அனைத்து மதம் சார்ந்தவர்களுடன் சேர்ந்து சமூகசேவையாற்றி வருகிறேன். எனக்கு அனைத்து மதத்தினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மெகருன்னிசா
மதுரை மாநகராட்சி 54-வது வார்டில் போட்டியிடும் மெகருன்னிசா, பிளஸ்-2 வரை படித்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுமியர் நலனை கருத்தில் கொண்டு சமூக சேவையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:-
இந்திய தேசம் குறித்த பிரதமரின் பார்வை விசாலமானது. பாரதிய ஜனதாவில் அனைத்து மதத்தினருக்கும் சரிசம வாய்ப்பு தரப்படுகிறது. அது முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற தவறான பிம்பம் உருவாக்கப்பட்டு உள்ளது. சமூகத்தின் அடித்தட்டில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் நிஜம் சார்ந்த உண்மையை புரியவைக்க முடியும். அதற்கான பணிகளில் இப்போது நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை மாநகராட்சியின் 36-வது வார்டில் போட்டியிடும் பசீர்அகமது, பாரதிய ஜனதாவின் ஒரே முஸ்லிம் ஆண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறியதாவது:-
பாரதிய ஜனதா முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்று தான் நானும் முதலில் நினைத்தேன். அதன் பிறகுதான் அது உண்மை அல்ல என்பது தெரியவந்தது. எனவே நான் கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதாவில் சேர்ந்து கட்சி பணியாற்றி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.