முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்னொரு வழக்கில் கைது; 9-ந் தேதி வரை நீதிமன்ற காவல்
1 min readFormer minister Jayakumar arrested in another case; Court custody until 9 p.m.
23.2.2022
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்னும் ஒரு வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். அவரை மார்ச் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயக்குமார்
தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறையினரால் திங்கட்கிழமை இரவு கைது செய்து செய்யப்பட்டு ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னர்,மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து,அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றொரு வழக்கு
இந்த நிலையில், பூந்தமல்லி சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் முறைகேடுகளை தடுக்க கோரி 19-ந் தேதி ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதோடு சேர்த்து அவர் மீது பதியப்பட்ட மற்றொரு வழக்கு தொடர்பான விசாரணையும் நடைபெற்றது. இதனையடுத்து,ஜெயக்குமார் அவர்களை மார்ச் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.