இலங்கையில் 26 அமைச்சர்களின் ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்பு
1 min read
President Gotabhaya Rajapaksa has accepted the resignation of 26 ministers in Sri Lanka
4.4.2022
இலங்கையில் 26 அமைச்சர்களின் ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டார்.
பொருளாதார நெருக்கடி
கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கும் போடப்பட்டதால் கொழும்பு நகர வீதிகளில் ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
ராஜினாமா
இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் பொய்யானது என்றும், தற்போது அப்படி எந்த திட்டமும் இல்லை என்றும் இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இலங்கையின் அமைச்சரவை அவசர ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிபர் கோத்தய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சேவைத் தவிர ஒட்டு மொத்தமாக 26 அமைச்சர்களும் பதவி விலகியதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார். இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விவாதித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்பு
பதவி விலகியுள்ள அமைச்சர்களில், ராஜபக்சேவின் சகோதரர்கள் நிதியமைச்சர் பசில், விவசாயத்துறை அமைச்சர் சமல் மற்றும் ராஜபக்சே மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான நமல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்துடன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பிரதமர் மகிந்த ராஜபக்சே சந்தித்தார்.
இந்த நிலையில் 26 அமைச்சர்களின் ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டு உள்ளார்.
அமைச்சரவை
இதையடுத்து, இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார்.
அமைச்சர் பதவிகளை ஏற்று பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இதில், நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனயும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸ், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.