குரங்கு நடத்திய தடியடி/ கண்ணாயிரம் கதை
1 min read
Laticharch by monkey/ Kanayiram story by Thabasukumar
20.4.2022
கண்ணாயிரம் சிலம்பம் கற்றுக்கொள்ள சென்றபோது பயில்வானுக்கு பயந்து மூன்று சட்டைகள் போட்டுக்கொண்டு சென்றார். உடற்பயிற்சி செய்ய சட்டைகளை கழற்றசொன்னபோது கண்ணாயிரம் மூன்று சட்டைகளையும் கழற்றி புளிய மரக்கிளையில் தொங்கவிட்டார். ஒற்றைக்காலை ஊன்றி ஒற்றைக்காலை தூக்கி சூரியனை வணங்கி உடற்பயிற்சிசெய்தபோது வெயில் தாங்காமல் மயங்கிவிழுந்தார்.
பின்னர் மனைவியுடன் வீட்டுக்கு சென்றபோது சட்டைகளை மறந்து வீட்டுக்குபோய்விட்டார். திரும்பிவந்து பார்த்தபோது ஒருசட்டையை ஒரு குரங்கு போட்டிருந்தது.மற்ற இரண்டு சட்டைகளும் யாருக்கு சொந்தம் என்று இரண்டு குரங்கள் சண்டைபோட்டுக்கொண்டிருந்தன.
இதைபார்த்ததும் கண்ணாயிரம் கோபம் அடைந்து மரத்தின் மீது நின்ற குரங்குகள் மீது கல்லை தூக்கி வீசினார். ஆனால் குரங்குகள் நகர்ந்து கொண்டு கண்ணாயிரத்தை பார்த்து நக்கலாக சிரித்தன. இதனால் கண்ணாயிரம்…அய்யோ என் சட்டை போச்சே என்று மரத்தின் முன் நின்று அழுது கொண்டு நின்றார். அதைப்பார்த்த ஊர் பொது மக்கள் கண்ணாயிரம் என்ன ஆச்சு என்று கேட்டவாறு அங்கு வந்தார்கள். அவர்களிடம் கண்ணாயிரம் தன் சட்டைகளை இரண்டு குரங்குகள் தூக்கிச்சென்ற கதையை கூறினார்.
அந்த நேரத்தில் அவரது நண்பர் அங்கு வந்தார். கண்ணாயிரத்தின் கவலையை தெரிந்துகொண்ட அவர்…கண்ணாயிரம்…இதுக்கு போயி அழலாமா…விடு..விடு. சின்ன வகுப்பிலே நாம ஒருபாடம்படிச்சோமே.. நினைவிருக்கா…தொப்பி வியாபாரி மரத்தின் அடியில் தூங்கிய போது அவர் கூடையில்வைத்த தோப்பிகளை குரங்குகள் தூக்கிக்கொண்டு மரத்தில் ஓடிவிடும். வியாபாரி தூங்கி விழித்தவுடன் குரங்கு தொப்பிகளை போடுன்னு சொல்லிப்பார்ப்பாரு. ஒரு குரங்கும் தொப்பியை போடாது. இதனால வியாபாரி கோபத்தில் தனது தலையில் வைத்திருந்த தொப்பியை எடுத்து குரங்கை நோக்கி வீசினாரு. உடனே குரங்குகளும் கோபத்தில் தொப்பிகளை கீழே வீசிவிடும். வியாபாரியும் தொப்பிகளை எடுத்து கூடையில் அடுக்கிக்கொண்டு வீட்டுக்குபோய்விடுவார். புரியுதா..என்றார்.
கண்ணாயிரம் உடனே..அது தொப்பி…குரங்கு உடனே எடுத்து வீசிட்டு..ஆனா..இது சட்டை…நான் என்ன பண்ணுறது..என்று கேட்டார்.
அதற்கு அவர்…கண்ணாயிரம்..நீயும் உன்சட்டையை எடுத்து வீசு…குரங்குகள் வைத்திருக்கிற சட்டைகளை கீழே வீசிடும் எப்படி நம்ம ஐடியா என்றார்.
கண்ணாயிரம் சந்தேகத்துடன்..உண்மையிலே குரங்கு என்சட்டைகளை கீழே போட்டுருமா…என்று கேட்டார்.அதற்கு அவர் நண்பர் நான் கேரண்டி கண்ணாயிரம்..நீ உன் சட்டை ஒண்ணு எடுத்துட்டுவா என்றார்.
கண்ணாயிரம் தயங்கி தயங்கி வீட்டுக்கு போனார். மனைவி பூங்கொடியிடம் நடந்த விவரத்தை கூறினார். அவர் என்னங்க..இப்படி பண்ணுறீயள…கிழிஞ்ச சட்டையா பார்த்து எடுத்துட்டுபோங்க என்று கத்தினார். கண்ணாயிரம் வீட்டில் ஒரு மூலையில் கிடந்த சட்டையை எடுத்துக்கொண்டு போனார். அடுத்து என்ன நடக்க போகுதோ என்று ஊர்மக்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். கண்ணாயிரத்தை பார்த்த அவர் நண்பர்…கண்ணாயிரம்..சட்டையை சுருட்டி மேல வீசுங்க என்றார். கண்ணாயிரம் சட்டையை பந்துபோல் சுருட்டி மேல வீசினார். குரங்குகள் சிரித்தன. சட்டை மீண்டும் கீழேவந்துவிழுந்தது. ஆனால் குரங்குகள் சட்டைகளை கீழேபோடவில்லை.
அதை பார்த்த கண்ணாயிரம் தன் நண்பரை பார்த்து என்ன…குரங்கு கீழே சட்டையை போட்டுரும்ன்னு சொன்னீங்க போடலைய்யே என்று கேட்டார்.
அதற்கு அவர்…கண்ணாயிரம் உனக்கு சட்டையை சரியாக வீச தெரியல.குரங்கு மேல படுறமாதிரி சட்டையை வீசணும்..எங்கிட்ட கொடு நான்வீசறன்..என்றார். கண்ணாயிரமும் சட்டையை அவரிடம் கொடுத்தார்.அவர் சட்டையை நன்றாக மடக்கி ஒன் டூ திரி என்று சொல்லியவாறு சட்டையை தூக்கி குரங்கை நோக்கி வீசினார். அதை கவனித்த ஓரு குரங்கு லபக் என்று ஒரு கையால் அந்த சட்டையை கேச்பிடித்தது. அதைபார்த்த பொது மக்கள் குரங்கை பார்த்து கைகொட்டி சிரித்தார்கள். குரங்குகளும் பதிலுக்கு சிரித்தன.
கண்ணாயிரம் அதிர்ச்சி அடைந்தார்.அய்யோ…ஏற்கனவே மூணு சட்டை போச்சு…இப்பம் நாலாவதா இருந்த சட்டையும் போச்சே…நான் என்ன பண்ணுவேன் என்றார். அவரது நண்பர் அவரை அமைதிபடுத்தினார். கண்ணாயிரம் கேட்கவில்லை.நீங்க சொல்லித்தானே ..ஒரு சட்டையை எடுத்துவந்து கொடுத்தேன்.அதை வீசினா…எடுத்துட்டு போன மற்ற சட்டைகளை கீழேவீசிடுமுன்னு சொன்னீங்க…ஆனா வீசின சட்டையையும் கேச்பிடிச்சிட்டே…என்று அழுதார்.
அதைபார்த்த நண்பர்…கண்ணாயிரம் இது புது குரங்குகள் போலிருக்குது..ஏமாற மாட்டேங்குது. இதற்கு புதுசா யோசிக்கணும். அதற்கு இன்னொரு சட்டை வேணும் என்றார்.அதை கேட்ட கண்ணாயிரம்…ம்..இனி எங்கிட்ட சட்டை இல்ல..என்றார். அங்கிருந்த ஒருவர் கண்ணாயிரம்…ஏய் உன் நண்பன் பேச்சக்கேட்டு ஏமாந்து போகாத…அவன் ஒரு போக்கத்தவன் என்று திட்டினார். அதை கேட்டதும் கண்ணாயிரம் நண்பனுக்கு கோபம் பொங்கியது. என்னை எப்படிடா போக்கத்தவன்னு சொல்லலாம்..உன் சட்டையை கழற்றாம விடமாட்டேன்.பாருடா என்று அவர் மேல் பாய்ந்தார். இருவரும் கட்டிப்புரண்டு சட்டை போட்டார்கள்.
மரத்தில் நின்ற இரண்டு குரங்குகளும் சண்டையை வேடிக்கை பார்த்தன.கண்ணாயிரம் சண்டை போடாதீங்க என்று சொல்லிப்பார்த்தார். அவர்கள் கேட்கவில்லை. கண்ணாயிரத்தின் நண்பர் தன்னுடன் சண்டை போட்டவரின் சட்டையை கழற்றினார். மரத்தில் சட்டைபோட்டபடி நின்ற குரங்கை மற்றொரு குரங்கு கோபத்துடன் பார்த்தது. கையிலிருந்த சட்டைகளை மரக்கிளையில் வைத்துவிட்டு அந்த இரண்டு குரங்குகளும் கீழே சண்டை போடுபவர்களை பார்த்து அதேபோல் அவைகளும் சண்டை போட்டன. ஒரு குரங்கு போட்டிருந்த சட்டையை மற்றோரு குரங்கு கழற்றியது.
கீழே கண்ணாயிரத்தின் நண்பர் தன்னுடன் சண்டைபோட்டவரின் சட்டை கழற்றி மேலே வீசினார். அப்போது குரங்கு போட்டிருந்த சட்டையை போராடி சண்டையிட்டு கழற்றிய குரங்கு அதை எடுத்து வீசியது. மேல போட்டிருந்த சட்டையை பறிகொடுத்த குரங்கு ஆத்திரத்தில் மற்றொரு குரங்கு மரக்கிளையில் தொங்கவிட்டிருந்த மூன்று சட்டைகளையும்
கீழே எடுத்து வீசியது.
அதைபார்த்த கண்ணாயிரம் அப்பாட..சட்டை தப்பிச்சுது என்று தனது மூன்று சட்டைகளையும் அடையாளம் கண்டு எடுத்தார்.
கண்ணாயிரம் சண்டை போட்டுக்கொண்டிருந்த தன் நண்பரை பார்த்து…ஏங்க..சண்டை போடாதீங்க…சட்டை கிடச்சிட்டு..என்று சொல்லிப்பார்த்தார். அவர்கள் கேட்கவில்லை. இருவரும் மும்முரமாக சண்டை போட்டார்கள். அதை பார்த்த குரங்குகள் புளியங்காய்களை பறித்து சரமாரியாக கீழே நின்றவர்கள் மீது வீசின. அதைபார்த்த பொது மக்கள் சிதறி ஓடினார்கள். அப்போதும் கீழே உருண்டு சண்டை போட்டவர்கள் சண்டையை நிறுத்தவில்லை.
புளிய மரக்கம்பை முறித்த இரண்டு குரங்குகளும் கீழே வந்தன. சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு பேரின் முதுகில் பளார் பளார் என்று அடித்தன. வலி தாங்காத அவர்கள் கோபத்தில் தாக்கிய குரங்குகளை பார்த்து அய்யோ அம்மா என்று அலறி அடித்து ஓடினார்கள். கண்ணாயிரம் பயந்துபோய் பார்த்துக்கொண்டு நின்றார். அவரை முறைத்து பார்த்தன குரங்குகள். அவர் சட்டைகளை பொருக்கிக்கொண்டு அங்கிருந்து நாலுகால் பாய்ச்சலில் வீட்டுக்கு ஓடினார். குரங்கு கொடுத்த அடிதான் ஊரெல்லாம் பேசப்பட்டது.
சண்டைய கலைக்க போலீஸ்காரங்கத்தான் தடியடி நடத்துவாங்க.. இங்கே குரங்க தடியடி நடத்தி சண்டைய நிறுத்துட்டுதே என்று பேசிக்கொண்டார்கள்.
வே.தபசுக்குமார்.புதுவை.