பேட்டரி தீ விபத்தால் 1,400 ஸ்கூட்டர்களை திரும்ப பெற ஓலா நிறுவனம் முடிவு
1 min read
Ola company decides to recall 1,400 scooters due to battery fire
24.4.2022
மின்சார வாகனங்களில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்து காரணமாக 1,400 ஸ்கூட்டர்களை திரும்ப பெற ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தீவிபத்து
சமீப காலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் வாகனங்களைத் திரும்பப் பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
இது குறித்து ஓலா நிறுவனம் வெலியிட்டுள்ள அறிக்கையின் படி, புனேயில் மார்ச் 26-ந் தேதி அன்று நடந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
முழு சோதனை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறிப்பிட்ட தொகுப்பில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட ஸ்கூட்டர்களில் விரிவான பாதிப்பு மற்றும் முழு சோதனையை நடத்துவோம்.
அதன்படி, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 1,441 யூனிட் மின்சார இரு சக்கர வாகனங்களை திரும்பப் பெறுகிறது.
இந்த ஸ்கூட்டர்கள் எங்கள் சேவை பொறியாளர்களால் ஆய்வு செய்யப்படும்.
ஓலா பேட்டரி அமைப்புகள், ஏற்கனவே இந்தியாவில் சமீபத்தில் முன்மொழியப்பட்ட தரத்துடன் இணங்குகின்றன, மேலும், ஐரோப்பிய தரநிலை இசிஇ 136 உடன் இணங்குகின்றன.
இருப்பினும், எங்கள் சேவை பொறியியலாளர்கள், அனைத்து வெப்ப அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், பேட்டரி அமைப்புகளிலும் முழுமையான சோதனையை செய்வார்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஓலா மட்டுமல்லாமல் பிற நிறுவனங்களான, ஒகினாவா ஆட்டோடெக் 3,000 வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது. அதே போல, பியூர் இவி நிறுவனம் 2,000 வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர் மின்சார வாகன தீ விபத்துகள் குறித்து ஆய்வு செய்ய, ஒரு குழுவை அமைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது. மேலும், நிறுவனங்களின் அலட்சியம் காரணமாக விபத்து ஏற்பட்டிருந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.