இலங்கைக்கு இந்தியா படைகள் அனுப்பட மாட்டாது
1 min read
Indian troops will not be sent to Sri Lanka
11.5.2022
அசாதாரண சூழல் நிலவும் இலங்கைக்கு பாதுகாப்பு படைகள் எதுவும் அனுப்பும் திட்டம் இல்லை என்று இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கையில் நெருக்கடி
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் வெகுண்டெழுந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து பிரதமர் பொறுப்பில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினர். இதையடுத்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.
மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.பேருந்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றன. போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. மேலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தஞ்சம் அடைந்துள்ள கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தியப்படைகள்
இலங்கையில், நிலவும் அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வர இந்தியா படைகளை அனுப்பலாம் என்று இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கைக்கு படைகள் எதுவும் அனுப்பப்படாது” என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:-
இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்ப இருப்பதாக சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவும் தகவலை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இத்தகைய தகவல்கள் இந்தியாவின் நிலைப்பாடு கிடையாது. இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் என்று நேற்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சுப்பிரமணியசாமி
ராஜபக்சே குடும்பத்திற்கு மிக நெருக்கமானவராக கருதப்படுபவரும்,பா.ஜனதா எம்.பியுமான சுப்பிரமணியன்சாமி இலங்கையில் அரசியலமைப்பு நிலையை மீட்டெடுக்க இந்தியா கண்டிப்பாக இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும். தற்போது இந்திய எதிர்ப்பு அந்நிய சக்திகள் மக்களின் கோபத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது என கூறி இருந்தார். முதலில் இலங்கையின் பெயரை நேரடியாகச் சொல்லாத சுப்பிரமணியசாமி, பின்னர் தனது அறிக்கை இலங்கை பற்றியது என்று கூறினார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கோரிக்கைக்கு இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டு உள்ள மற்றொரு டுவிட்டில் பிரதமரின் இல்லம்கூட எரிக்கப்படுகின்றது. எம்.பி.க்கள் கும்பலால் சுட்டுக் கொலப்பட்டு உள்ளனர். அதற்குக் காரணமானவர்கள் இரக்கம் காட்ட தகுதியானவர்கள் அல்ல. நமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதற்கு அனுமதிக்க முடியாது என கூறி உள்ளார்.