June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை தாக்கவந்த குக்கர் / நகைச்சுவைக் கதை

1 min read

The cooker that attacked Kannayiram /comedy story by Thabasukumar

24.5.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்லவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் இறைசாசிக்கடைக்காரர் பற்றிய பயத்தில் உறங்கிவிட்டார். ஆனால் அவர்மனைவி பூங்கொடி தூங்கவில்லை. அதிக உற்சாகத்தில் குற்றாலம் செல்ல கொண்டு செல்லவேண்டிய பொருள்களை எடுத்துவைத்துக்கொண்டிருந்தார். டிரங்பெட்டியை திறந்து தனது சேலை சட்டைகளை அடுக்கினார்.
குற்றாலம் பற்றிய நினைவுகள் அவரை குதூகலம் ஊட்டியது. சமையல் அறைக்கு சென்று பாத்திரங்களை கழுவி அடுக்கினார். அந்த சத்தம் கேட்டு கண்ணாயிரம் எழுந்தார். என்ன சத்தம் என்றவாறு சமையல் அறைக்கு சென்றார். அங்கே பூங்கொடியைபார்த்து…என்ன தூங்கலய்யா..பாத்திரத்தை உருட்டிக்கிட்டு என்று கேட்டார்.
அதற்கு பூங்கொடி ஏங்க மணி மூணு ஆச்சு..தூங்குனா அவ்வளவுதான் விழிக்க நேரமாகிவிடும். காலையிலே எட்டு மணிக்கு பஸ்சு..தெரியுமா..என்று அதட்டினார்.சரி…என்னால விழிச்சிருக்க முடியாது..நான் தூங்குறேன்..எழுப்பிவிடு என்றபடி மீண்டும் கட்டிலில் சென்று படுத்தார்.
கண்ணாயிரம் மீண்டும் குறட்டைவிட்டு தூங்கினார்.பூங்கொடி விழித்திருந்து…மற்ற வேலைகளில் ஈடுபட்டார்.மணி ஐந்தாகியது. கண்ணாயிரத்தை எழுப்பினார். ஏங்க..என்னங்க.எழும்புங்க..மணி ஐந்தாகிவிட்டது. போய் நல்லா பல்விளக்கிட்டு குளிச்சிட்டுவாங்க..உங்களுக்கு காப்பி போட்டுவைக்கிறேன் என்றார்.
கண்ணாயிரம் கண்களை கசக்கியபடி இப்பமேவா…இன்னும்விடியக்கூட இல்ல..என்று சொன்னார். அதற்கு பூங்கொடி..ஏங்க தொண தொணன்னு பேசிக்கிட்டு இருக்காதீங்க..நீங்க பாத்ரூமுக்கு போனா ஒரு மணிநேரம் ஆகும்…அப்படியே இருந்துக்கிடுவீங்க..போனமா வந்தம்மான்னு இருக்கமாட்டிய..எழும்புங்க என்று சத்தம்போட்டார்.
கண்ணாயிரம் வேறுவழி இல்லாமல் ..அப்பாட…பாதி தூக்கம் இருக்கு..அதுக்குள்ள எழுப்புறபோ..என்றவாறு எழுந்தார். ஒரு துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தார்.பல் துலக்கினார்.வாய்கொப்பளிக்க குழாயை திறந்தார். தண்ணீர் வரவில்லை. கண்ணாயிரத்துக்கு கோபம்வந்தது. பூங்கொடி…பூங்கொடி…எல்லா தண்ணீரையும் பாத்திரம் கழுவிட்டியா..குழாயிலே தண்ணி வரல..மோட்டாரை போடு என்று கத்தினார். அதைகேட்ட பூங்கொடி..சத்தம் போடாதீங்க..மோட்டாரை போட்டுவிடுறேன். கொஞ்சமா குளிங்க..குற்றாலத்துல நல்லா குளிக்கலாம்..புரியுதா..கிணற்றிலே தண்ணி அதிகம் இல்ல என்று சொன்னார். கண்ணாயிரம் ம்..சரி.கொஞ்சமா குளிக்கிறேன் என்றார். பூங்கொடி மோட்டாரை போட்டுவிட்டார். நாலு ஊருக்கு சத்தம் கேட்டது. ஊ…ஊ..என்று அது போட்ட சத்தம் கண்ணாயிரத்துக்கு சகிக்கல…காதை பொத்திக்கொண்டார். குற்றாலம் போய்வந்ததும் இந்த மோட்டாரை சரிபண்ணணும்..டங்..டங்..டொங்..டங்.ஹ என்ற சத்தம் வேறு வந்தது. ஏங்க…சீக்கிரம் குளிச்சிட்டுவாங்க..மோட்டார் எப்பவேணுமுன்னாலூம் நின்னுறும் என்றுபயம் காட்டினார்.
கண்ணாயிரம் சரி..சரி..என்றபடி வாளியில் தண்ணீரை நிரப்பினானார்.செம்பில் தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றினார்.
மோட்டார்..ம்ம்…ம்ம்..என்று மூச்சுவாங்கிக்கொண்டிருந்தது. கோடைகாலமுன்னா கிணற்றுல தண்ணி கீழேபோயிடுது…மோட்டார் திணறுது…என்றபடி கண்ணாயிரம் மெல்ல குளித்தார்.சுவரில் காதுவைத்து மோட்டார் ஓடுதா இல்லையா என்று செக்பண்ணினார்.சோப்பு போடலாமா வேண்டாமா..தண்ணீர் வரலைன்னா என்ன பண்ணுறது..எல்லாம் குற்றாலத்திலே போயி எண்ணை தேய்த்து சோப்பு போட்டு மூணு மணிநேரம் குளிக்கலாம்…என்று நினைத்தார்.அரைகுறையாக குளித்துவிட்டு வெளியேவந்தார்.
மோட்டார் ஓடும் சத்தமே கேட்கவில்லை.என்ன ஆச்சு என்று பூங்கொடியிடம் கேட்டார்.கிணற்றுல தண்ணி இல்லங்க…மோட்டாரை நிறுத்திட்டேன்..தண்ணி பெருகிவர ஒருமணி நேரம் ஆகும்..அப்புறம் மோட்டாரை போட்டு நான் குளிக்கிறைன்…இன்னாங்க காப்பி குடிங்க என்று டம்ளரை நீட்டினார்.சூடாக இருந்த காப்பியைவாங்கி கண்ணாயிரம் குடித்தார்.
ஒரு மடக்கு உள்ளேபோனதும்..ஆ..என்ன சூடு நாக்கு பொத்துபோச்சு என்றபடி காப்பி டம்ளரை மேஜையில்வைத்தார்.
என்ன இப்படி சுடுது..கொதிக்குது…என்றவாறு இன்னொரு டம்ளரில் காப்பியை ஆற்றி குடித்தார்.காப்பி நல்லாத்தான் இருக்கு ஆனா சூடுதான் தாங்கமாட்டேங்குது என்று சொன்னார். பூங்கொடி சமையல் அறையிலிருந்து..என்னங்க காப்பி குடிச்சிட்டியளா…இட்லி கொண்டுவர்ரேன் சாப்பிடுங்க என்றார். அதற்கு கண்ணாயிரம்..என்ன இப்பமேவா..வேண்டாம் என்று சொன்னார்.ம்…மணி ஆறாச்சி…கடகடன்னு நேரம் போயிரும்…இன்னாங்க சாப்பிடுங்க என்றவாறு ஒரு தட்டில் ஒன்பது இட்லி மற்றும் சட்டினி கொண்டுவந்தார். கண்ணாயிரம் தட்டைவாங்கி மேஜையில்வைத்தார். இட்லி சூடா இருக்கு..ஆறட்டும் சாப்பிடுறேன் என்றார்.
எனக்கு தெரியாது எட்டு மணிக்கு பஸ்சுவந்துடும்..அப்புறம் நேரமாயிட்டு நேரமாயிட்டுன்னு குதிக்கக்கூடாது..என்று பூங்கொடி சத்தம் போட்டார்.கண்ணாயிரம் தட்டை கையில் எடுத்து ஒரு இட்லியை சட்டினியில் தொட்டு விழுங்கினார். விக்கிக்கொண்டது.தண்ணி..தண்ணி…என்றார்.மெதுவா சாப்பிடவேண்டியதுதானே என்றவாறு பூங்கொடி தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். கண்ணாயிரம் தண்ணீரை கொஞ்சம் குடித்தார். அடுத்த இட்லியை சின்னதா பிய்த்து சட்டினியில் தொட்டு வாயில் போட்டார். தண்ணீர் குடித்தார்.ம்..இட்லி ஏன் இவ்வளவு கல்லா இருக்கு…விழுங்ககூட முடியல…என்றவர் பூங்கொடி ஏன் இட்லி கல்லா இருக்கு..என்று கேட்டார்.
மாவு வெளியிலேவாங்கினேன்…அது இப்படி இருக்கு ஒரு நாளைக்கு சாப்பிடுங்க…என்றார்.
கண்ணாயிரம் என்னது…வீட்டிலே மாவு ஆட்டலைய்யா…ஏன் என்று கேட்டார். ஏங்க..சேலையை அயர்ன்பண்ணக்கொடுக்க போனேனா…அப்போ எல்லோரும் ஒருகடையிலே மாவு வாங்கினாங்க…அதைப்பார்த்து நானும் மாவு பாக்கெட்வாங்கினேன்..என்றார்.
கண்ணாயிரம் விழித்தார்.ஏய் இந்த இட்லியை சாப்பிட்டுட்டு குற்றாலத்துக்கு பஸ்சிலேபோனா…இடையிலே வயிறு கடமுடான்னு ஆயிட்டா எங்கே ஓடுறது…அதனால இரண்டு இட்லி போதும்…மீதி எனக்கு வேண்டாம் என்று சொன்னார்.
பூங்கொடியும் சரி..சரி..இட்லியைவச்சிட்டு எழும்புங்க…புறப்படுவதற்குரிய வேலையை பாருங்க என்றார். கண்ணாயிரம் அப்பாட..இட்லியிலிருந்து தப்பிச்சோம்…என்றவாறு உள்ளறைக்கு சென்றார். கை கால்களுக்கு எண்ணை தடவினார். அயர்ன்பண்ணின வேட்டி சட்டையிலே எதை இப்போது போடலாம் என்று யோசித்தார். சூட்கேசில் அடுக்கியிருந்த வேட்டி சட்டையில் சென்ட் மணம் தூக்கியது. அப்பாட என்ன மணம்..என்ன மணம்…என்று புகழ்ந்தவாறு வேட்டியை எடுத்து உதறிவிட்டு இடுப்பில் கட்டினார். அரைஞாண்கயிறை எடுத்து இடுப்பு வேட்டி நிற்க மாட்டினார். பணியன் எடுத்து போட்டுக்கொண்டார். பச்சை நிற சட்டையை எடுத்து உதறிபோட்டுக்கொண்டார்.கருப்பு கண்ணாடியை எடுத்து முகத்தில் மாட்டினார்.கண்ணாடியில் முகம்பார்த்தார்.பவுடர் பூசினார்.தலையை சீவினார்.மீண்டும் கண்ணாடியில் முகம் பார்த்தார். ரொம்ப அழகா இருக்கு..என்று தன்னைத்தானே புகழ்ந்துகொண்டார். தலைமுடியை குருவி கூடுபோல ஆக்க முயன்றார்.முடியவில்லை.சீப்பை எடுத்து மறுபடியும் முயற்சியில் இறங்கினார்.
அப்போது பூங்கொடி..ஏங்க…நான் குளிக்க போறன்…நாலுவிசில் சத்தம்வந்தவுடன் குக்கரை ஆப்பண்ணுங்க…மறந்திடாதீங்க என்றவாறு குளிக்க போனார்.
மோட்டாரை பூங்கொடி போட்டார்.அது..ஊ.ஊ..ஊ..டொமக்…டொமக் என்ற இரைச்சல் சத்தத்துடன் ஓட ஆரம்பித்தது.வீடெல்லாம் ஒரே சத்தம்..என்ன இந்த மோட்டார் இப்படி சத்தம் போடுது…கொட. கொடா..கொட..ட. டொங்…டொங் என்று வேறு சத்தம் வந்தது. ரைஸ்மில் ஓடுறமாதிரி…சத்தம் காதை பிளந்தது..ம்மு..மு…மு..மு..டொக்..டொக்…டொக்…டிசைன் டிசைனா சத்தம்வருதே என்ற நினைத்த கண்ணாயிரத்துக்கு குக்கர் போட்டவிசில் சத்தம் கேட்கல…ஆனால் அவர் குக்கர் விசில் அடிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டார். சிறிது நேரம் கழிந்தது.என்ன இவ்வளவு நேரமாகியும் விசில் சத்தம்வரலையே..ஏதாவது கோளாறு ஆயிட்டா…என்று நினைத்தவர் ம்..அப்படியெல்லாம் ஆயிருக்காது என்று மனதில் எண்ணினார். இந்த நேரத்தில் மோட்டார் சத்தம் அதிகமாக…குளியல் அறையில் இருந்த பூங்கொடி ஏங்க…மோட்டாரை ஆப் பண்ணுங்க ஏன்று கத்தினார். கண்ணாயிரத்துக்கு அரைகுறையாக கேட்டது. ஓடிச்சென்று மோட்டாரை ஆப்பண்ணினார். சத்தம் நின்றது. குளியல் அறையிலிருந்து வெளியேவந்த பூங்கொடி என்ன சமையல் அறையிலிருந்து புகைவருது…ஏங்க குக்கரை ஆப் பண்ணினியளா என்று பதட்டத்துடன் கேட்டார். கண்ணாயிரம் உடனே..குக்கர் விசிலே அடிக்கல…அதனால ஆப்பண்ணல என்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் கண்ணாயிரத்தை நோக்கி புகையுடன் பறந்துவந்தது குக்கர். கண்ணாயிரம் அலறி அடித்து ஓடினார்.குக்கர் கீழேவிழுந்து எல்லாவிசிலும் அடித்து…அதிலிருந்த சாம்பாரெல்லாம் கொட்டி..வீடே ஒரே புகைமயமாக இருந்தது.பூங்கொடி அதிர்ச்சியுடன் குக்கரை பார்த்தபடி நின்றார்.கண்ணாயிரம் உள்ளறைக்குள் சென்று கதவை மூடியபடி ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்தார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.