நிறுத்துடா…. பஸ்சுக்குள் கத்திய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை
1 min read
Kananyiram cried in bus . Story by Thabasukumar
2.6.2022
கண்ணாயிரமும் அவர் மனைவி பூங்கொடியும் குற்றாலம் செல்ல சுற்றுலாபஸ்சில் ஏறினார்கள். பஸ்புறப்பட்டபோது வீட்டை நன்றாக பூட்டிவிட்டாயா என்று பூங்கொடியிடம் கண்ணாயிரம் கேட்க ஏங்க வீட்டையே பூட்ட மறந்துட்டேங்கேங்க என்றுசொன்ன பூங்கொடி பஸ்சை நிறுத்திவிட்டு வீட்டை பூட்டுவதற்காக பஸ்சைவிட்டு இறங்கி சென்றார். கதவில் பூட்டுவதற்காக சாவி வைத்ததை மறந்துவிட்டு பூங்கொடி வீடெல்லாம் தேட பூங்கொடியை தேடி கண்ணாயிரம் வீட்டுக்கு செல்கிறார். கதவில் தொங்கிய சாவியை கண்டுபிடித்து வீட்டை பூட்டிவிட்டு பூங்கொடியும் கண்ணாயிரமும் பஸ்சை.நோக்கிவந்தபோது இறைச்சிகடைக்காரர் முறைத்தபடி வந்தார்…. என்ன வீட்டையெல்லாம் முதலிலே ஓழுங்கா பூட்டிட்டுவரமாட்டியளா..எவ்வளவு நேரமாகுது..சீக்கிரம் ஓடிவாங்க என்று கத்தினார்.
இதோ..வந்துட்டோம்…நீங்க போங்க..என்று கண்ணாயிரம் அவரை சமாளிக்க நினைத்தார். பூங்கொடியோ…யாருங்க..அந்த ஆளு..நம்மள விரட்டுறது…நானும் அப்பமே இருந்து பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்…எல்லாரையும் முறைச்சிக்கிட்டு இருக்காரு என்று என்று கூற, கண்ணாயிரமோ பயந்து நடுங்கினார்.
பூங்கொடி..அமைதி…அமைதி..எதுன்னாலும் குற்றாலம் போயிட்டு வந்து வச்சிக்குவோம்..இப்பம் சத்தம் போட்டியன்னா…குற்றாலத்துக்கு போகவுடாம பண்ணிடுவான்…அதனால சத்தம் போடாத என்று கெஞ்சினார்.
அதைபார்த்த இறைச்சிக்கடைக்காரர்….அங்கே என்ன சத்தம்..சீக்கிரம் வாரியளா…இல்லே உங்களைவிட்டு பஸ்சு போகட்டுமா என்று சத்தம் போட்டார்.
கண்ணாயிரம் பதறிப்போனார்..இதோ..வந்துட்டோம்…ஒண்ணும் பிரச்சினை இல்லை…என்றவாறு பூங்கொடியை இழுத்துக்கொண்டு பஸ்சை நோக்கி ஓடினார்.
இறைச்சிக்கடைக்காரர்…ம்..சீக்கிரம்போயி பஸ்சிலே ஏறுங்க…பஸ் ஏற்பாடே நான்தான் தெரியுமா..என்று உதார்விட்டார்.
கண்ணாயிரத்துக்கு இறைச்சிக்கடைக்காரர் துள்ளுவதின் காரணம் புரிந்துவிட்டது. ம்..இதைவச்சே எல்லாரையும் மிரட்டுவாரு…பஸ்சிலே கூடவராதவரைக்கும்..நமக்கு நிம்மதி தான்..என்றவாறு கண்ணாயிரம் பஸ்சில் ஏறினார்.
பூங்கொடியும் இப்போதைக்கு ஒண்ணும் பேசக்கூடாது…வந்துவச்சிக்கிடுவோம் கச்சேரியை என்று வாயை மூடியபடி பஸ்சுக்குள் ஏறிச்சென்றார்.
பஸ்சில் முன்பகுதியில் கண்ணாயிரமும் பூங்கொடியும் அமர்ந்தார்கள்.உடனே டிரைவர் கீழே இறங்கினார். ஒவ்வொரு டயராக தட்டிப்பார்த்தார். பின்னர் அருகில் உள்ள கடையில் ஒரு சிகரெட்டு வாங்கிபத்தவைத்தார்…ஊதினார்…சிகரெட்டை ஊதிக்கொண்டே இருந்தார். நேரம் போனது…இறைச்சிக்கடைக்காரர் டிரைவரை ஒன்றும் சத்தம்போடவில்லை.அவரிடம் போய்ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். ஐந்து நிமிடம் கழிந்தது டிரைவர் பஸ்சில் ஏறினார். பஸ்சை ஸ்டாட் பண்ணினார். பஸ்மெதுவாக..புதுவையிலிருந்து புறப்பட்டது. இறைச்சிக்கடைக்காரர் சுடிதார் சுதாவுக்கு டாடா காட்டிவிட்டு மோட்டார்சைக்கிளில் பறந்தார். இதைபார்த்த பூங்கோடி…யாருங்க அந்த பொண்ணு…இறைச்சிக்கடைக்காரர் டாடாகாட்டிட்டு போறாரு என்று கேட்டார். கண்ணாயிரம் உஸ்…சத்தமா பேசாத…அந்த பொண்ணு இறைச்சிக்கடைக்காரரிடம் போட்டுக்கொடுத்துட்டா…சிக்கலாகிவிடும்..அமைதியாகவா..நமக்கு எதுக்கு வம்பு என்றார்.
பூங்கொடியும்…சரி..சரி..யாரு எந்தாக்கபோனா நமக்கென்ன..நான் செல்போனில் முதல்ல எங்க அப்பாக்கிட்ட தகவல் சொல்லிடுதேன்…என்றவாறு அருவா அமாவாசையிடம்..அப்பா..இப்பதான் பஸ் புறப்பட்டு போகுது..ரொம்ப லேட்டு…டிரைவர் சிகரெட்டு குடிச்சிக்கிட்டே லேட் பண்ணிட்டாரு…சரிப்பா..பத்திரமா போயிட்டுவர்ரோம்…நீங்க உங்க உடம்பை பாத்துக்குங்க…என்று சொல்லிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.
எல்லோரும் பூங்கொடியை முறைத்தனர்..என்ன வீட்டை பூட்டாம வந்துட்டு பஸ்சைலேட்டா போகவச்சிட்டு…சிகரெட்டு குடிச்ச டிரைவர் மேல பழியை போடுறீயா என்று கேட்பதுபோல் இருந்தது.
பூங்கொடி அதை கண்டு கொள்ளாமல் மினரல்வாட்டர்கேனை திறந்து டம்ளரில் தண்ணீர் ஊற்றிகுடித்தார். அதை பார்த்ததும் மினரல்வாட்டர் பாட்டில் வாங்கிவந்தவர்கள் அதை திறந்து..ஒரு மடக்குடித்துவிட்டு பாட்டிலை மூடினார்கள். நாங்களும் மினரல்வாட்டர் குடிப்போம்ல என்று சொல்வது போல் இருந்தது.
மெதுவாக சென்ற பஸ் கொஞ்சம் வேகமாக செல்ல ஆரம்பித்தது.கண்ணாயிரம் முகத்தில் கறுப்பு கண்ணாடியை மாட்டி தலைக்கு தொப்பி அணிந்தபடி கையில் குறுந்தடியை பிடித்தபடி சீட்டில் சாய்ந்தபடி பெரு மூச்சுவிட்டபடி இருந்தார். எந்தவித பிரச்சினையும்இல்லாமல் குற்றாலம் போகணும் என்று மனதில் நினைத்துகொண்டார்.. பூங்கொடி ஜன்னல்வழியாக வேடிக்கைபார்த்தபடி வந்தார்.
பஸ் அரியாங்குப்பத்தை தாண்டி தவளக்குப்பத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.பஸ்சில் ஒவ்வொருவரும் கதைபேசியபடி சிரித்தவாறு வந்தார்கள். ஒரே கலகலப்பா இருந்தது.
இந்த நேரத்தில் கண்ணாயிரத்தின் செல்போன் ஒலித்தது. குறுந்தடியை கீழேவைத்துவிட்டு…தன் மேல்சட்டைபையில் இருந்த செல்போனை அவசரமாக எடுத்தார். ஜவுளிக்கடைக்காரர் லைனில்வந்திருந்தார். இவர் ஏன் இப்ப பேசுறாரு…என்றபடி கண்ணாயிரம் ஹலோ என்றார்.
எதிர்முனையில் பேசியவர்..ஹலோ எல்லாம் இருக்கட்டும்..ரூபா என்னாச்சு..என்று கேட்டார்.
கண்ணாயிரம் பதட்டத்துடன் எந்த ரூபாய் என்று கேட்க ஜவுளிக்கடைக்காரர் ஊஷ்ணமானார்…என்ன எந்த ரூபாவா…ஏய்..உள்ளாட்சி தேர்தலில நிக்கப்போறன்னுட்டு பெண்களுக்கு சேலை வாங்கி கொடுத்தியே..அந்த ரூபா பத்தாயிரம் எங்கே ஏன்று கேட்டார்.
கண்ணாயிரம் உஷாராகி…அந்தபணமா..உள்ளாட்சி தேர்தல்வரட்டும்..தர்ரேன் என்றார்.
ஜவுளிக்கடைக்காரர் கோபத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போவரும்..அப்பம் பணம் தருவியா..அதுவருமா வராதான்னுகூட தெரியல…அதுவரைக்கும் தாக்கு பிடிக்க முடியாது.பணத்தை கொடு…என்று அதட்டினார்.
அதற்கு கண்ணாயிரம்..பொறுங்க..எங்கிட்ட இப்போ பணம் இல்ல..பணம்வந்ததும் தர்ரேன் என்று சொன்னார். ஜவுளிக்கடைக்காரர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.என்ன ஏமாத்துறீயா..பணம் இல்லன்னா எப்படி குற்றாலம் போவ குடும்பத்தோட..என்னை ஏமாத்த முடியாது என்றார்.
உடனே கண்ணாயிரம்..நான் குற்றாலத்துக்கு போறேன்னு யார் சொன்னா..என்று கேட்டார். அதற்கு ஜவுளிக்கடைக்காரர்..எனக்கு தெரியாதா..இறைச்சிக்கடைக்காரர்தான் சொன்னாரு..போதுமா..இரண்டு சூட்கேசு நிறைய அள்ளிட்டு போறீயாம்..பணம் மட்டும் இல்லையா என்று மடக்கினார்.
கண்ணாயிரம் கொஞ்சம் கோபமாக..கண்டவங்க சொல்லுறதையெல்லாம் நம்புறீயளா..பணம் கிடையாது என்று சொன்னார். அதை கேட்டதும் ஜவுளிக்கடைக்காரர் ஆத்திரத்தில்..பணம் கொடுக்க வக்கில்ல..உனக்கு குற்றாலம் ஒருகேடா..தூ..என்று ஏசினார்.
கண்ணாயிரமும் பதிலுக்கு ஏய்..வம்பா பேசாதே என்று கத்தினார். பதிலுக்கு ஜவுளிக்கடைக்காரர்..பணம் கொடுக்க துப்பில்ல..உனக்கு கருப்பு கண்ணாடி கேட்குதா என்று சொல்லகண்ணாயிரம்..ஏய்.பெர்சனலா பேசாதே என்றுசத்தம் போட்டார். ஜவுளிக்கடைக்காரர் கேட்கவில்லை.பணம் தரவழி இல்லை..உனக்கு தலைக்கு தொப்பிவேற கேட்குதா..தொப்பி…மானங்கெட்டவனே என்று திட்டினார். அதைகேட்டதும் கண்ணாயிரம் பொறுக்க முடியாமல்..ஏய்..நிறுத்து…என்ன நான் சொல்லுறன் போய்கிட்டே இருக்கிற என்று கத்தினார்.
அதை கேட்ட டிரைவர்..யாரை நிறுத்தசொல்கிறான்..என்றபடி சந்தேகத்தில் திரும்பிபார்த்துவிட்டு மீண்டும் ஓட்டினார்.
ஜவுளிக்கடைக்காரர் மேலும்…காசுகொடுக்க…எண்ணமில்ல..இதுவேலவேற கையிலே..சின்ன தடிவேற…நீயெல்லாம் சோறுதான் நீங்கியா..இல்ல.பண்ணி திங்கிறதை…என்று இழுக்க கோபத்தின் உச்சாணிக்கு சென்ற கண்ணாயிரம் பஸ்சைவிட்டு எழுந்து..ஏய் நிறுத்துடா..நான் சொல்லுறன் நிறுத்துடா..அறிவு கெட்டவனே..நான் சொல்லுறது..காதிலே விழுதா இல்லையா..நிறுத்துடா..நிறுத்துடா.. அதுவாட்டுக்கு போய்கிட்டே இருக்க…நிறுத்தடா என்று ஓங்கி கத்தினார்.
டிரைவர் திரும்பிபார்த்துவிட்டு கண்ணாயிரம் ஆவேசமாக நிற்பதை பார்த்து நம்பளத்தான் பஸ்சை நிறுத்தச்சொல்கிறார என்று நினைத்து கோபத்தில் சடன்பிரேக்போட்டார்.
அந்தவேகத்தில் பஸ்சில் மேலவைத்திருந்த கண்ணாயிரத்தின் சூட்கேஸ் மற்றும் டிரெங்பெட்டி கடபுடா என்று கீழே விழ கண்ணாயிரம் நகர்ந்து கொள்ள கண்ணாயிரத்தின் அடுத்த சீட்டில் இருந்தவர் டிரெங்பெட்டி தலையில் பட்டு தலையை தடவிக்கொண்டிருந்தார். டிரைவர்ஸபஸ்சை நிறுத்திவிட்டு கோபத்தில் எழுந்து கண்ணாயிரத்தை நோக்கிவந்தார். எதுக்காக பஸ்சை நிறுத்த சொன்ன சொல்லு என்று அதட்ட கண்ணாயிரமோ..நான் உங்களை சொல்லலை டிரைவர்.. ஜவுளிக்கடைக்காரரை சொன்னேன்…அவர் என்னை தரக்குறைவான. பேசுனாரு…அவரைத்தான் பேச்சை நிறுத்தச்சொன்னேன்…நீங்க..போங்க சார் என்றார் கூலாக..
அதைக்கேட்டதும் அனைவரும் கண்ணாயிரத்தை அடிக்கபாய்ந்தனர்.
-வே.தபசுக்குமார்.புதுவை.