June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தள்ளுபடிக்கு கண்ணாயிரம் சொன்ன புது விளக்கம்/ சிறுகதை

1 min read

New interpretation of the discount by Kannayiram Story by Thabasukumar

4.5.2022
கண்ணாயிரமும் அவர்மனைவி பூங்கொடியும் குற்றாலம் செல்ல சுற்றுலா பஸ்சில் தாமதமாக வந்து ஏறினார்கள்.அவர்களை எல்லோரும் முறைத்து பார்த்தார்கள். பயில்வான்…எல்லோரும் வந்துவிட்டார்களா என்று செக் பண்ணியபடி இருந்தார். எல்லோரும் வந்தவுடன். சரி. பஸ்போகலாம் என்றுசொல்ல பஸ் புறப்பட்டது.
பஸ்சில் சீட்டு பின்னால் காலியாக கிடந்ததால் பயில்வான் பின்னால் அமர்ந்துவந்தார். இந்த நேரத்தில் பஸ்சில் டிரைவர் சீட்டுக்கு பின்னால் இருந்த கண்ணாயிரம் செல்போனில் ஜவுளிக்கடைக்காரர் பணம் கேட்டு திட்டியதால் உஷ்ணமானார். வாங்கின சேலைக்குரிய பணத்தை தர வக்கில்ல..சோறுதான் சாப்பிடுறியளா இல்ல வேறு எதுவும் சாப்பிடுறீயளா என்று ஏசியதால் கண்ணாயிரம் ஆத்திரத்தில் எழுந்து நிறுத்து…என்ன நான் சொல்லுறன்..நீ போய்கிட்டே இருக்க..நிறுத்து ஜவுளிக்கடைக்காரரை கத்த பஸ்டிரைவரோ..அதை வேறுமாதிரியாக நினைத்து பஸ்சை நிறுத்த சொல்வதாக கருதி வேகமாக பஸ்சை நிறுத்தினார்.
இதில் ஏற்பட்ட தடுமாற்றத்தில் கண்ணாயிரம் பஸ்சில் மேல்பகுதியில் சொருகி வைத்திருந்த டிரங்பெட்டி மற்றும் சூட்கேஸ் கடபுடா என்று கீழேவிழ ஆத்திரத்தில் கண்ணாயிரத்தை தப்பாக புரிந்துகொண்டு அனைவரும் அடிக்கபாய…ஒரே பரபரப்பாகியது. பூங்கொடி எழுந்து..மற்றவர்களை பார்த்து…ஏங்க..அவர் மேல என்னங்க தப்பு இருக்கு…அவர் செல்போனில பேசும்போது அந்தபக்கமிருந்து பேசுகிறவரை நிறுத்த சொன்னார்…அதை டிரைவர் தப்பா நினைத்து பஸ்சை நிறுத்துனா..அவரைத்தான் நீங்க அடிக்கணும்..என் கணவர் மீது கைவைத்தா நடக்கிறதே வேற என்று அதட்டினார்.
உடனே பஸ் டிரைவர் கோபமாக…என்ன நான்தான் தப்பா நினைச்சு பஸ்சை நிறுத்தினேனா…இருக்கட்டும். இனி..யார்சொன்னாலும் பஸ்சை நிறுத்தமாட்டேன் என்று கத்தினார்.
தகராறு பேரிதாவதை பார்த்த பயில்வான்…என்ன அங்கே பிரச்சினை என்றவாறு எழுந்து வந்தார். டிரைவர் சார் நீங்க..உங்க சீட்டிலேபோயி உட்காருங்க..நான்விசாரிக்கிறேன் என்றார்.
டிரைவரும் பற்களை கடித்தபடி சீட்டில்போய் அமர்ந்தார்.
பின்னர் கண்ணாயிரத்திடம் நடந்தது என்ன என்று பயில்வான் கேட்டார். அதற்கு கண்ணாயிரம்…அதாவது வந்து..நான் உள்ளாட்சி தேர்தலில போட்டியிடுவதற்காக பெண்களுக்கு சேலை வாங்கி கொடுத்தேன். தள்ளுபடி விலையிலே சேலை விற்பனைன்னு போட்டிருந்தாரு. நானும் தள்ளுபடி பண்ணிருவாருன்னு நினைச்சு பெண்களுக்கு சேலை வாங்கி கொடுத்தேன். இப்பம் போனில வந்து அந்த சேலைக்கு பத்தாயிரம் கொடுன்னு சொன்னார். அதற்கு நான்…ஏங்க…ஏங்க..தள்ளுபடி விலையிலதான் சேலை கொடுத்தீங்க…இந்த பத்தாயிரத்தை தள்ளுபடி பண்ணிருங்கன்னு கேட்டேன்…வந்தது பாருங்க அவருக்கு கோபம் …ஏய்..தள்ளுபடின்னா
ஏங்க..ஏங்க..வங்கியிலே விவசாயிகள் கடன்வாங்கினா..தள்ளுபடிபண்ணுவாங்கல்லா…அப்படி பெண்களுக்கு சேலை வாங்கி கொடுத்தா தள்ளுபடி பண்ணுடுவீங்கன்னு நினைச்சேன் என்று சொன்னேன். நான் நியாயமாத்தானே சொன்னேன் என்று கேட்டார்
.பயில்வான் தலை ஆட்டியபடி …சரி..சரி..அப்புறம் என்ன நடந்தது.. அதை சொல்லுங்க..என்றார்.
கண்ணாயிரம் என்னன்னு தெரியுமான்னு கேட்கிறாரு எங்கிட்ட…நான்விடுவேனா..
மெல்ல சீட்டில் சாய்ந்தபடி அப்புறம் கேளுங்க…வங்கியிலே தள்ளுபடி பண்ணுறமாதிரி ஜவுளிகடையிலே தள்ளுபடி பண்ணமுடியாதுன்னு சொல்லிட்டாரு..நான் விடுவேனா…அப்பம் ஏன் தள்ளுபடி விலையில் விற்பனைன்னு ஏன்கடைக்கு வெளியே போர்டு தொங்கவிட்டிங்கன்னு கேட்டேன்..
அதுக்கு அவர் சொன்னாரு…அப்படி போட்டாதான்…மக்கள் வருவாங்கன்னு சொன்னாரு..உடனே நான்…சரி தள்ளுபடி பண்ணுங்கன்னு சொன்னா கோபப்படுறாரு…
ஏய் புரியாம பேசாதே…நூறு ரூபாய் மதிப்புள்ள துணியை இருபது ரூபாய் தள்ளுபடி பண்ணி எண்பது ரூபாய்க்கு கொடுப்போம் என்று சொல்லுறாரு…நானும் விடல…ஏங்க..வெறும் தள்ளுபடின்னு மட்டும் வெளியே எழுதிபோட்டிருந்திங்க என்று கேட்டேன். அதற்கு அவர்..என்னைய்யா…முட்டாத்தானமா பேசுற..இருபது சதவீதம் தள்ளுபடின்னு கடைக்குள்ளே எழுதி தொங்கவிட்டிருந்தோம் பார்க்கலையா என்கிறாரு…வெளியே தொங்கவிட்டிருக்கதைதானே…நாம பாப்போம்…உள்ளே யாரு பாப்பா சொல்லுங்க..என்று அப்பாவியாக கேட்டார்.
பயில்வான்…சரி..சரி..நீங்க சொல்லுறது சரிதான்..ஒரு சந்தேகம்…ஜவுளிக்கடையில கடனுக்கு ஜவுளி வாங்கினா கடனை தள்ளுபடி பண்ணிருவாங்கன்னு நீங்களா நினைச்சிங்களா இல்ல..வேறு யாரும் யோசனை சொன்னாங்களான்னு கேட்டார். அதற்கு கண்ணாயிரம்..அந்த அளவுக்கு நமக்கு மூளை ஏது…என் நண்பன் சின்ன கண்ணாயிரம்தான் சொன்னான். தள்ளுபடின்னு போட்டிருந்தா கடையிலே தள்ளுபடி பண்ணிருவாங்கன்னு சொன்னான். ஏங்க..தள்ளுபடின்னு போர்டு போடாத வங்கியிலே கடனை தள்ளுபடி பண்ணும்போது தள்ளுபடின்னு போர்டு போட்டிருக்கிற கடையிலையும் தள்ளுபடிபண்ணுவாங்கன்னு நினைச்சேன் என்று சொன்னார்.
அதை கேட்ட பயில்வானுக்கு வியர்த்தது. சரி..அப்புறம் என்ன நடந்தது..ஜவுளிக்கடைக்காரரை ஏன் திட்டினிங்க..அதை சொல்லூங்க…என்று சொன்னார்.
கண்ணாயிரம் மீண்டும் ஆரம்பித்தார். அதை கேட்கிறீயளா…நான் கடனை தள்ளுபடி பண்ணும்படி ஜவுளிக்கடைக்காரருக்கிட்ட கேட்டதால…அவரு அதெல்லாம் முடியாது..கொரானாவுல கடை திறக்காம…ரொம்பபாதிப்பாயிட்டு..ரூபாயை கொடுத்துடுங்க..என்று அழுகிற மாதிரி கேட்டார். எனக்கும் மனசு இளகிட்டு..சரி..போனாபோகுதுன்னுட்டு..பணம் தர்ரேன்னு சொல்லிட்டேன்..உடனே அவர்…பணத்தை எப்போ தருவேன்னு கேட்டாரு.நான் உடனே…பாண்டிச்சேரியில எப்போ உள்ளாட்சி தேர்தல்வருதோ அப்போ தர்ரேன்னு சொன்னேன்…அவ்வளவுதான்…அவர் காட்டுக் கத்தல் கத்த ஆரம்பிச்சிட்டாரு..தேர்தல் இப்போதைக்கு வராதுன்னு அவருக்கு யாரோ சொல்லி இருப்பாங்க போலிருக்குது…அதனால அவரு..கோபத்தில் திட்டினாரு..சாதாரண திட்டா…காதிலே ரத்தம்வருகிற அளவுக்கு திட்டினாரு..சோறு சாப்பிடுறியா..இல்லை..வேறு எதுவும் சாப்பிடுறாயா என்று ஏசிக்கொண்டே போனாரு..அதனாலதான் நிறுத்து..போயிக்கிட்டே இருக்கான்னு திட்டினேன். அதை தப்பா புரிஞ்சுக்கிட்டு டிரைவர் பஸ்சை நிறுத்திட்டாரு. இதுதான் நடந்தது என்று சொல்லிமுடித்தார்.
அதை கேட்டு பயில்வான் பெரு மூச்சுவிட்டார்…கண்ணாயிரம் நீ போனில் சொல்லும்போது..பேச்சை நிறுத்துன்னு சொல்லியிருகணும்..மொட்டையா நிறுத்துன்னு சொன்னதால இவ்வளவு பிரச்சினை..சரி இனி கண்ணாயிரம் தெளிவா பேசணும்..அடுத்து டிரைவர் சீட்டுக்கு பின்னால நின்னு கத்தினதால..டிரைவரும் பஸ்சை நிறுத்திப்புட்டாரு..சரி..அதுக்கு என்ன செய்யலாம்..சீட்டை மாத்திடுவோம் என்றார்.
கண்ணாயிரம் அதை கேட்டு விழித்தார். அதை புரிந்த பயில்வான் மெல்ல..கண்ணாயிரம் முன்னுக்கு இருந்தால் டிரைவர் திடீரென்று பிரேக்போட்டால் தலை இடித்துவிடும். எதிரே லைட்டு போட்டுக்கிட்டு பஸ் வந்தாபயமா இருக்ககும்…அதனால பஸ்சில இடம் மாறிடுங்க..கடைசியிலே ஏராளமான சீட்டு காலியா கிடக்கு…அப்படியே நீங்க படுத்துக்கிட்டே வரலாம்…வீடியோவில படம் போட்டாலும் நல்லா பார்க்க முடியும்..என்றார்.
படுத்துக்கிட்டே படம்பார்க்கலாம் என்று சொன்னதால் கண்ணாயிரம் உற்சாகமானார். மனைவி பூங்கொடியை அழைத்துக்கொண்டு கடைசி சீட்டுக்கு நாலு சீட்டுக்கு முன்புள்ள சீட்டுக்குள் பூங்கொடி செல்ல..அவரை பின்தொடர்ந்து கண்ணாயிரம் சென்றார்.
அப்போது பஸ்சில் இருந்தவர்கள் பயில்வானிடம்..ஏங்க..இந்த டிரங்பெட்டியையும் சூட்கேசையும் கண்ணாயிரம் மேல சொருகிவைத்ததால் அது கீழேவிழுந்து ஒருவருக்கு தலைவீங்கி போச்சு…இந்தபெட்டிகளையும் தூக்கிட்டு போகச்சொல்லுங்க. என்று கத்தினர்.
பயில்வான் அந்த பெட்டிகளை பார்த்தார். என்ன கண்ணாயிரம் இது..காலம் எவ்வளவு முன்னேறிட்டு இன்னும் டிரெங்பெட்டியை தூக்கிட்டு வந்திருக்கிங்க…சரி…சரி…அங்கே இருங்க..ஒரு சீட்டிலே டிரங்பெட்டியையும் சூட்கேசையும்வையுங்க..எந்த பிரச்சினையும் இருக்காது என்றபடி அவைகளை தூக்கிக்கொண்டு கடைசி சீட்டுக்கு முன்னால உள்ள சீட்டில்வைத்தார்.
கண்ணாயிரம் வேறுவழி இல்லாமல் சரி என்று ஏற்றுக்கொண்டார்.
அப்போது .ஜவுளிக்கடைக்காரர் மீண்டும் கண்ணாயிரம் செல்போனில் வந்தார். அதைப்பார்த்து கண்ணாயிரம் பதட்டமாகி..பயில்வான்சார்..ஜவுளிக்கடைக்காரர் மீண்டும் செல்போனில் வந்து சண்டை இழுக்கிறாரு..என்னசெய்ய என்று கேட்டார்.
உடனே பயில்வான் வேகமாக…செல்போனல சுவிட்ச் ஆப்செய்து கால்சட்டைபைக்குள் போடுங்க என்றார்.
கண்ணாயிரமும் உடனே..அதுதான் சரி என்றபடி வேகமாக..செல்போனை சுவிட்ச்ஆப் செய்து கால்சட்டைபைக்குள் போட்டார். தப்பிச்சோம்..இனி பேசமாட்டார் என்று பெருமூச்சுவிட்டார்.

சரி…சரி..பிரச்சினை சால்வு ஆயிட்டு…டிரைவர்சார் பஸ்சை எடுக்கலாம்..என்றார் பயில்வான்.
டிரைவரும் கண்ணாயிரத்தை இடமாற்றம் செய்ததால் மகிழ்ச்சியுடன் பஸ்சை ஸ்டாட் செய்தார். பஸ் ஸடார்ட் ஆகவில்லை.
மூச்சுவாங்கி மூச்சுவாங்கி நின்றது. டிரைவர் எரிச்சலுடன்…பஸ்ஸ்டாட் ஆகவில்லை..இறங்கி பஸ்சை தள்ளுங்க…என்று கத்தினார்.
பயில்வான் பஸ்சில் உள்ள வாலிபர்களை அழைத்துகொண்டு கீழே இறங்கினார். கண்ணாயிரமும் கீழே இறங்க முயன்றார். பூங்கொடி அவரை தடுத்தார. நீங்க பஸ்சை தள்ளி பஸ்சு போகுமா..இன்னும் வாலிபமுன்னு நினைப்பா..என்று அதட்டினார்.

கண்ணாயிரம்..இது நமக்கு வேண்டாத வேலை…நம்ம பிரச்சினையே பெரும் பிரச்சினையாக இருக்குது…இனி எதிலும் தலையிடக்கூடாது என்று நினைத்து கொண்டார்.
: பயில்வான் தலைமையில் வாலிபர்கள் பஸ்சை தள்ளினார்கள்.பஸ் பெரு மூச்சுவிட்டபடி புறப்பட்டது.டிரைவர் கீழே நின்றவர்களை ஏற்றாமல் பஸ்சை. ஓட்டிசென்றார். பயில்வான் கனத்த குரலில் டிரைவர் பஸ்சை நிறுத்துங்க என்று கத்தினார். டிரைவர் கொஞ்சம் விளையாட்டு காட்டும் வகையில் பஸ்சை வேகமாக ஓட்டிசென்று நிறுத்தினார்.
பயில்வானும் மற்றவர்களும் ஓடிவந்து பஸ்சில் ஏறினார்கள்.கண்ணாயிரம் நினைத்தார்…அப்பாட..நாம கீழே இறங்கல..அப்படி இறங்கி இருந்தா..டிரைவர் பஸ்சைவிட்டுட்டு ஓட்டிட்டு போயிருப்பாரு…என்றார்.
பயில்வானும் மற்றவர்களும் மூச்சு இரைக்க பஸ்சில்வந்து அமர்ந்தார்கள். டிரைவர் சிரித்தபடியே…பஸ்சை வேகமாக ஓட்டிச்சென்றார்.
கண்ணாயிரம் சீட்டு காலியாக இருந்ததால் ஹாயாக படுத்து கொண்டார். பஸ்வேகமாக சென்றதால்…கொஞ்சம் குலுக்கியது. பூங்கொடி..ஏங்க…எந்திரிங்க…படுக்காதீங்க…கீழே விழுந்திருவீங்க என்று அதட்டினார்.
கண்ணாயிரம் எழுந்து உட்கார்ந்தார்.பஸ் வேகமாக சென்றதால் பஸ்சுக்குள் காற்று வீசியது. பஸ் கன்னிக்கோவில் வந்த போது இறைச்சிக்கடைக்காரர் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்தார். (தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.