உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை 6 சதவீதம் அதிகரிப்பு
1 min read6 percent increase in student enrollment in higher education
28.6.2022
உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை 6 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி மாணவர் சேர்க்கை
கர்நாடகத்தில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 6 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார். திறன் பயிற்சி திறன்மிகு கர்நாடக திட்டம் சார்பில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் புத்தொழில் (ஸ்டார்ட்-அப்) நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
வேலை, திறன், தொழில்முனைவு ஆகிய துறைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சி கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அனைத்து நிறுவனங்களும் அரசின் திறன் இணையம் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் எங்கெங்கு உள்ளது என்பது தெரியும். அதன் அடிப்படையில் அவர்கள் திறன் பயிற்சியை பெற முடியும். கட்டண பயிற்சி, இலவச பயிற்சி போன்ற மூன்று வகையிலான பயிற்சி முறைகள் உள்ளன. தேசிய கல்வி கொள்கை தேசிய கல்வி கொள்கையும் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கையை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம். இதே முறையை பிற மாநிலங்களும் பின்பற்றுகிறது. கற்றல் முறை முழுவதுமாக மாறியுள்ளது. டிஜிட்டல் கல்வி, பொருளாதாரம்,சுகாதாரம் போன்றவை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் நடவடிக்கைளால் உயர்கல்வியில் சேர்க்கை 6 சதவீதம் அதிகரித்துள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தொழிற் பயிற்சி நிலையங்களில் சேருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் எந்த வேலையாக இருந்தாலும் சரி அவற்றுக்கு மனித வளம் பற்றாக்குறையாக இருக்க கூடாது என்பதே அரசின் நோக்கம் ஆகும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.