கருக்குழாய் அடைப்பும் குழந்தையின்மையும்
1 min readFallopian tube obstruction and infertility
கருக்குழாய் அடைப்பும் குழந்தையின்மையும்
குழந்தையின்மைக்கான காரணங்களில் சுமார் 40 சதவிகிதப் பெண்களைப் பாதிக்கிற பிரச்னை கருக்குழாய் அடைப்பு / ஃபெல்லோபியன் குழாய்களில் அடைப்பு – Blocked Fallopian Tubes. அப்படி என்றால் என்ன? அது எப்படி குழந்தையின்மைக்குக் காரணமாகிறது என்பதை எல்லாம் பார்ப்பதற்கு முன், கருக்குழாயின் அமைப்பைப் பற்றியும் அதன் வேலைகளைப் பற்றியும் ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
கருக்குழாய் அமைப்பு
ஒவ்வொரு கருப்பைக்கும் இரண்டு கருக்குழாய்கள் உண்டு. இக்கருக்குழாய் நான்கு கூறுகளாக (Segments) பிரிக்கப்பட்டுள்ளது. அவை
1. கருப்பை – உள் இருக்கும் பகுதி (Intra Mural Segment / Cornual Segment)
2. இடை இணைப்புப் பகுதி (Isthmial Segment)
3. குடுவைப் பகுதி (Ampullary Segment)
4. மருவிகள் பகுதி (Fimbrial Segment).
இதில் கருக்குழாயில் உள்ள துவாரம், கருப்பை உள்ளிருக்கும் பகுதியிலும் இடை இணைப்புப் பகுதியிலும் மிகக் குறுகியதாகவும் குடுவை பகுதியிலும் மற்றும் மருவிகள் பகுதியிலும் சற்று விரிந்தும் காணப்படும். கருக்குழாயின் துவாரம் (Lumen) அடர்ந்த உயிர்மங்கள் (Cells) உடையதாக இருக்கும். இந்த உயிர்மங்கள் சளிப்படலங்களாகவும் (Mucous membrane folds) சுரப்பிகள் கொண்டதாகவும் இருக்கிறது.
இந்த உயிர்மங்கள் பல நுண்ணி மயிரிழைகள் (Cells) என்று சொல்லப்படும் சிறு மயிரிழை இணைப்பகங்கள் உண்டு. இந்த உயிர்மங்கள் சளிப்படலங்களாகவும் (Mucous membrane folds) சுரப்பிகள் கொண்டதாகவும் இருக்கும். இந்த மயிரிழைகள் எப்போதும் கருப்பையை நோக்கி அசைந்து கொண்டு இருக்கும்.
கருக்குழாயின் முக்கிய பணிகள்
1. கருமுட்டையைக் கைப்பற்றுவது
2. ஆண் விந்தணுக்களை கருமுட்டையிடம் சேர்த்து கருத்தரிக்கச் செய்வது.
3. சிசு (Embryo) உருவாகிய பின் அதைப் பாதுகாத்து கருப்பைக்குள் சேர்ப்பது.
கருவணுவகத்திலிருந்து (Ovary) கருமுட்டை உருவானதும் கருக்குழாயின் மருவிகள் பகுதி சினைப்பையைச் சூழ்ந்து கொள்ளும். கருமுட்டை வெளிப்படும்போது அதைக் கைப்பற்றி உள்ளிழுத்துக் கொள்ளும். இவ்வாறு கருக்குழாயை அடைந்து குடுவைப் பகுதியில் 2 – 3 நாள் வரை தங்கியிருந்து முழுமையான வளர்ச்சியை அடையும். ஆண் விந்துக்கள் கருமுட்டையை இப்பகுதியில் தான் கருவுறச் செய்யும் (Fertilization). இப்படி கருவுற்ற கருமுட்டை பகுப்படைந்து சிசு ஆகிறது.
8 லிருந்து 16 உயிர்மங்களாகப் (8-16 Cell Stage) பிரிந்து இந்தச் சிசு கருக்குழாயில் இருக்கும் மயிரிழை உயிர்மங்களின் அசைவுகளாலும் கருக்குழாய்ச் சுவரின் தசைகளின் சுருக்கங்களாலும் கருப்பையை அடைந்து கருப்பையினுடைய படல உறையில் தன்னைப் பதித்துக் கொண்டு வளர்கிறது
கருக்குழாயில் உண்டாகும் நோய்களும் அதன் விளைவுகளும்
கருக்குழாய் நோய்களில் முதன்மையானது நுண்கிருமிகளால் இடுப்புப் பகுதியில் (Pelvis) ஏற்படும் அழற்சி நோய்கள் (Pelvic Inflammatory Disease).
இப்போது பால்வினை (Sexually Transmitted Diseases) நோய்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கிளமைடியா ட்ரக்கோமேடிஸ் (Chlamydia Tracomatis) என்கிற நுண்கிருமியும் நைசீரியா குனோரியா (Neissieria Gonnorhoea) என்கிற நுண்கிருமியும் 40 சதவிகிதம் பால்வினை நோய்களை ஏற்படுத்தி கருக்குழல் சிதைவுக்குக் காரணமாகின்றன.
மேலும் மைக்கோபேக்டீரியம் ஹோமினிஸ் (Mycobacterium Hominis), யூரோபிளாஸ்மா யூரோலைட்டிகம் (Ureaplasma Urealyticum), ஹீமோபிளஸ் இன்புளூயென்ஸா (Hemophilius Influenza) போன்ற நுண்கிருமிகளும் 2-3 சதவிகிதம் குழலின் சிதைவுக்குக் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. சில நேரங்களில் பல கிருமிகள் ஒன்று சேர்ந்து இந்த நோய்த் தன்மைக்குக் காரணமாகலாம்.
இப்படி வரக்கூடிய நோய்கள் பிறப்புறுப்பு வழியாகக் கருப்பைக் குழியை (Endometrium) அடைந்து அங்கிருந்து கருக்குழாயை அடைகிறது.
சில நேரங்களில் இந்த நுண்கிருமிகள் ரத்த நாளங்கள் (Arteries) மூலமாகவோ, ரத்தச் சிரைகள் (Veins) மூலமாகவோ அல்லது நிணநீர் (Lymph) மூலமாகவோ கருக்குழலை அடைந்து சேதத்தை ஏற்படுத்தக் கூடும். பெருங்குடலில் ஏற்படும் நோய்களும், குடல்வாலில் ஏற்படும் நோய்களும் கருக்குழலை பாதிக்கக்கூடும். சிலருக்கு கருச்சிதைவு செய்த பின்னரோ, முதல் குழந்தை பிறந்த பிறகோ அல்லது தகுந்த காரணம் இல்லாத நிலையிலும் இந்நோய் பாதிப்பு உருவாகலாம்.
பெண்கள் கருவுறாமல் இருக்க கருக்குழாயில் பொருத்தப்படும் காப்பர்-டி (Cu-T) போன்ற சாதனங்களும் தூய்மையான நிலைகளில் போடப்படாவிட்டால் இந்நோய்கள் உருவாகலாம்.
மேலும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) என்று சொல்லப்படும் ரத்தக் கட்டிகளும் கருக்குழாயை பாதிக்கக்கூடும். இந்த நுண்கிருமிகள் கருக்குழலின் உயிர்மங்களின் மயிரிழைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி சளிப்படலங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளச் செய்கிறது. மேலும், கருக்குழலின் துவாரத்தில் அடைப்பை ஏற்படுத்தி கருவுறாமைக்கு முக்கிய காரணமாகிறது.
மேலும் இப்படி வரக்கூடிய நோய்கள் கருக்குழாயிலிருந்து வெளிப்பட்டு கருப்பையைச் சுற்றியுள்ள வயிற்று உள்ளுறையை (Peritonium) அடைந்து கருக்குழாய் குடல்களோடு ஒட்டச் செய்து அதன் இயக்கத்தை தடுத்துவிடுகிறது. இப்படி ஏற்படக்கூடிய நோய்கள் கருக்குழலின் தசைகளில் நீர்க்கட்டுகளை (Hydrosaiphinx) ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் இவை நீர்க்கட்டிகளாகவும் இருக்கலாம். கருக்குழலின் மருவிகள் அல்லது குடுவைப் பகுதிகளை இந்நோய் அதிகம் பாதிக்கிறது.
இது கருக்குழல் துவாரத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையான அடைப்பையோ உண்டாக்கி கருக்குழலில் உள்ள தசைகளுக்கும் சளிப்படலங்களுக்கும் உயிர்மங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி கருக்குழல் வீக்கங்களுடன் காணப்படுகிறது. மிகக் கடுமையாக இந்நோய்த் தாக்கப்பட்டால் உயிர்மங்களின் மயிரிழைகள் அசையாத் தன்மையோடு அல்லது அனைத்தும் சேதமடைந்து காணப்படலாம்.
இப்படி கருக்குழாயின் துவாரங்களுக்கு ஏற்படும் அடைப்புகளே கருவுறாமைக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. நுண்கிருமிகளால் ஏற்படும் இடுப்புப்பகுதி நோய்களுக்கு அவ்வப்போதே தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்துவிட்டால் கருவுறாமை தன்மையின் சதவிகிதம் குறைந்துவிடும்.
பெண்களுக்கு முதன் முறையாக ஏற்படும் இடுப்புக்கூட்டுப் பகுதி நோய் 13 சதவிகிதம், கருக்குழலின் அடைப்பையும், இரண்டாம் முறையாக ஏற்படும் இடுப்புக்கூட்டுப் பகுதி நோய் 35 சதவிகிதம் கருக்குழலின் அடைப்பையும், மூன்றாம் முறையாக வரக்கூடியது பெண்களுக்கு 75 சதவிகிதம் கருக்குழலின் அடைப்பையும் ஏற்படுத்தும். காசநோயும் இந்தப் பகுதியை தாக்கக்கூடும். கருத்தரிப்பதில் சிக்கலை சந்திக்கிற பெண்கள் இதைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.
நம் நாட்டில் 20 சதவிகித பெண்களுக்கு காசநோயே கருத்தரிக்காமைக்கு முக்கிய காரணம். இந்நோய் 90 சதவிகிதம் வரை கருக்குழாயை பாதிக்கிறது. காசநோய் பெரும்பாலும் உடலில் மற்ற பகுதியிலிருந்து முக்கியமாக நுரையீரல் பாதிப்பில்இருந்து, நிணநீர் வழியாகவோ அல்லது ரத்த நாளங்கள் வழியாகவோ கருப்பையை அடைகிறது. இப்படி அடையும் இந்நோய் கருக்குழலையே முதலில் பாதிக்கிறது. இந்நோயின் அறிகுறிகள் ஆரம்ப காலத்திலேயே தெரிவதில்லை.
கருத்தரிக்காததற்கான பரிசோதனைகளை செய்யும் போதே தெரியவருகிறது. இந்நோயின் பாதிப்பு இருந்தால் 60-98 சதவிகிதம் வரை பெண்கள் கருவுறாமல் அவதிப்படுகிறார்கள். 44 சதவிகிதம் பெண்களுக்கு இந்நோய் இரண்டு கருக்குழலையும் பாதிக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து பிறகு கருத்தரிப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும்.
இப்பெண்களுக்கு கருக்குழாயில் கருவுறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்னென்ன சோதனைகள்?
இடுப்புக்கூட்டுப் பகுதியில் ஏற்படும் நோய்களை முதலில் கண்டறிய வேண்டும். மிக முக்கியமானதும் முதலாவதாக செய்ய வேண்டியதுமான ஆய்வு.
கருப்பை குழாய் கணிப்பு ஊடுகதிர் படம் (ஹைஸ்டெரோசல்பிங்கோக்ராம் ஹெச்.எஸ்.ஜி. Hysterosalpingogram HSG) கருத்தரிக்காத ஒவ்வொரு பெண்ணும் இதைச் செய்து கொள்ள வேண்டும். இது கருப்பை குழியில் உள்ள வேறுபாடுகளையும் கருக்குழலின் துவாரத்தின் தன்மையையும் காட்டும். கருக்குழாயில் அடைப்புகள் இருந்தாலும் நீர்க்கட்டிகள் இருந்தாலும் மற்ற நோய் பாதிப்புகள் இருந்தாலும் இதில் தெரிந்துவிடும்.
இந்த ஆய்வை மாதவிலக்கு வந்த முதல் 10 நாட்களுக்குள் செய்ய வேண்டும். பொதுவாக இம்முறையில் நீரில் கரையும் ஊடுகதிர் நிறமியை (Water Soluble Radio Contrast Dye) கருப்பைக்குள் செலுத்தி பிறகு எக்ஸ்ரே படங்கள் எடுக்கப்படுகின்றன. இப்படங்களின் மூலம் கருப்பை மற்றும் கருக்குழாயின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம். கருக்குழாய் அடைப்பைக் கண்டுபிடிக்க HSG டெஸ்டுதான் உகந்தது. மேலும் லேப்ராஸ்கோப்பி செய்வதன் மூலம் 100 சதவிகிதம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
லேப்ராஸ்கோப்பி : நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களால் மட்டுமே இது செய்யப்பட வேண்டும். இம்முறையில் வயிற்றில் ஒரு சிறு துவாரத்தின் வழியாகக் கருப்பை, கருக்குழல், கருப்பையைச் சுற்றியுள்ள வயிற்று உள்ளுறை, அண்டக்குழி, இடுப்புப் பகுதியில் இருக்கும் மற்ற உறுப்புகளையும் நேரிடையாகப் பார்த்து அதன் இயக்கங்களையும், நோய் பாதிப்புகளையும் எளிதாகக் கண்டறிய முடியும். கருப்பையின் வெளித்தோற்றம், வெளிப்பகுதியில் உள்ள கட்டிகள், கருப்பையின் பிறவிக் கோளாறுகள், எண்டோமெட்ரியாசிஸ் மற்றும் கருக்குழலுடன் ஒட்டுதல் போன்றவற்றை எளிதாகக் கண்டறிய முடியும்.
கருக்குழலின் இயல்பையும், அதன் துவாரங்கள் அடைப்புகள் இன்றி உள்ளனவா என்பதையும், ஒட்டுதல்கள் ஏதேனும் உள்ளனவா என்பதையும், முக்கியமாக காச நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் கண்டறிவது அவசியம். காச நோய் பாதிப்பு இருப்பின் மேற்கூறியபடி கருக்குழாய் பெரிதும் சேதமடைந்து அதன் துவாரம் அடைப்புகள் உள்ளதாக காணப்படும்.
[கருக்குழாய் அடைப்பும் சில நேரங்களில் லேப்ராஸ்கோப்பியில் தெரியும். HSGயில் தெரியாமல் போகலாம். அல்லது HSGயில் தெரிந்து லேப்ராஸ்கோப்பியில் மறைந்து போகலாம். சிலருக்கு HSG செய்யும் போது Spasm எனப்படுகிற இழுப்பின் காரணமாக அது கருக்குழாய் அடைப்பு மாதிரித் தெரியலாம்].
அல்ட்ரா சவுண்ட் : இந்தச் சோதனையின் மூலம் உள்ளிருக்கும் உறுப்புகளை ஆய்வு செய்ய முடியும். இம்முறையில் 2 செ.மீ. மேல் உள்ள கருப்பை கட்டி, கருப்பை நோய் அல்லது வேறு சில பிறவி வேறுபாடுகளையும் கண்டறிய முடியும்.
ஹிஸ்ட்ரோஸ்கோப்பி (Hysteroscopy) :
இம்முறையில் கருப்பைக்குழியின் தன்மையையும் கருப்பை உள்ளிருக்கும் கருக்குழலின் முதல் பகுதியையும் (Intra mural Segment of Fallopian tube) விரிவாகக் கண்டறிய முடியும். கருப்பைக் குழியின் மாதவிலக்கின் முடிவில் ஏற்படும் மாற்றங்களையும் ஹார்மோன் பாதிப்புகள் உள்ளதா என்பதையும் கருக்குழியில் பாதிப்புகள் உள்ளனவா என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
என்னென்ன சிகிச்சைகள்?
சிகிச்சை முறைகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று லேப்ராஸ்கோப்பி மூலம் செய்யப்படும் சிகிச்சை. மற்றொன்று அறுவை சிகிச்சை முறை. இரண்டுமே அனுபவமும் திறமையும் உள்ள மருத்துவர்களால் செய்யப்பட வேண்டியவை. டியூபோபிளாஸ்டி என்கிற சிகிச்சை மைக்ரோஸ்கோப்பிக் மேக்னிஃபிகேஷன் முறையில், மைக்ரோ கருவிகளைக் கொண்டு மிக மிக கவனத்துடன், தேர்ந்த மருத்துவர்களால் மட்டுமே செய்யப்படும் போது வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
சினைக்குழாய் சம்பந்தப்பட்ட நவீன சிகிச்சைககளுக்கு டியூபோபிளாஸ்டி எனப் பெயர். இப்போது ஃபாலோபோஸ்கோப்பி என்று குழாய்க்குள் செலுத்திச் செய்யப்படுகிற எண்டோஸ்கோப்பி முறை மூலம் சினைக்குழாயின் உண்மையான செயல்திறனையும், அதன் உள்பாகத்தில் உள்ள நுண்ணிய மயிரிழைகளான சிலியாவின் இயக்கத்தையும் கண்டறியலாம்.
* ஆரம்ப காலத்தில் கிருமியால் உண்டாகும் மிகக் குறைந்த அடைப்பு மற்றும் சினைக்குழாய் புண்களை கிருமிகளுக்கு உண்டான மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.
* ஹைட்ரோசால்பிங்ஸ் எனப்படும் பழுதடைந்த சினைக்குழாய்கள் மருந்து மூலமும், Salphingostomy எனப் படுகிற லேசர் மைக்ரோ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையிலும் குணப்படுத்தி, இயற்கையாகக் கருத்தரிக்கச் செய்யலாம்.
* கார்னுவல் பிளாக் (Cornual block) எனப்படும் கருப்பையின் ஆரம்ப இடத்திலுள்ள சினைக்குழாய் அடைப்பை நவீன ஹிஸ்டெரோஸ்கோப்பி (hysteroscopy) எனப்படும் எண்டோஸ்கோப்பி வழியாக கருப்பையின் உள்ளே செலுத்தி சரியாக்கலாம்.
* சிகிச்சை எதுவும் பலனளிக்காமல், பல ஆண்டுகளாகியும், குழந்தையில்லாத நிலையில், சோதனைக் குழாய் சிகிச்சை முறையில் குழந்தை உண்டாக்கலாம். ஆரம்ப காலத்திலேயே தக்க பரிசோதனைகளைச் செய்து, சிகிச்சைகள் மேற்கொண்டால், பெரும்பாலும் சினைக்குழாய் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்த்து, குழந்தைச் செல்வம் பெறலாம்.
கருக்குழாய் மறு இணைப்பு சிகிச்சை இன்னொரு வாழ்வு!
முதல் குழந்தையே இல்லாதவர்கள் படும் பாடு எத்தனை பயங்கரமானதோ, அதைவிடக் கொடுமையானது பெற்ற பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு நிற்பது! அதிலும் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களின் நிலை அவலத்தின் உச்சம்! சுனாமி போன்ற பேரழிவுகளிலும் விபத்துகளிலும் குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிற பெண்களுக்கு மருத்துவத் துறையின் மாபெரும் வரம் Recanalisation என்கிற கருக்குழாய் மறு இணைப்பு சிகிச்சை.
கருக்குழாய் அடைப்பு காரணமாக குழந்தை இல்லாதவர்களுக்கு IVF மற்றும் ICSI போன்ற நவீன சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனாலும், அதற்கான செலவை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு கருக்குழாய் மறு இணைப்பு சிகிச்சையின் மூலம் 45 முதல் 50 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உண்டு.
கைக்கருகில் மருந்தை வைத்துக் கொண்டு தேடி அழைகிறோம். மருத்துவர் கொடுத்த மருந்துகளோடு துணை மருத்துவமாக இந்த எளிய மருத்துவத்தை பின்பற்றி பயனடையுங்கள்.
வாழைப்பூ மருந்தாகும் விதம்
மாதவிலக்கின் போது ஏற்படும் உடல் நலக்குறைபாடுகள் அனைத்தையும் போக்கும் மருந்து வாழைப்பூ. ஒரு மாதம் ஏதாவது ஒரு வகையில் மதிய உணவில் வாழைப்பூவை கூட்டாக, பொரியலாக, சூப்பாக சாப்பிட வேண்டும்.
அது போக மாதவிலக்கு சமயங்களில் வாழைப்பூவை கஷாயம் செய்து அருந்த வேண்டும்.
பெண்களுக்கு பயன் தரக்கூடிய வாழைப்பூ கஷாயம்
வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்
இஞ்சி – 5 கிராம்
பூண்டு பல் – 5
நல்ல மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 5 இணுக்கு
எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, கருப்பை அடைப்பு, வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் அனைத்து வலிகள், மாதவிலக்கு சீரற்ற தன்மை, குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள் போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.
அசோகமரப்பட்டை மருத்துவம்
அசோகமரப்பட்டையிலிருந்து தயாராகும் ஆயுர்வேத மருந்து அசோக அரிஷ்டம் அதை வாங்கி ஒரு ஸ்பூன் அளவு (50 ml) ஒரு நாளைக்கு இரு வேளை காலை வெறும் வயிற்றிலும் இரவு உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன்னும் அருந்த வேண்டும்.
நீங்கள் தயாரிப்பதாக இருந்தால் அசோக மரப்பட்டையை நாட்டுமருந்து கடைகளில் வாங்கி, நல்ல தட்டி பொடி பண்ணி ஒரு ஸ்பூன் அளவு இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராகும் வரை வற்றவைத்து கஷாயமாக காலை அரை டம்ளர் இரவு அரை டம்ளர் என குடிக்கவேண்டும். கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைக்கு நல்ல பலன் தரும், கர்ப்பப்பை அடைப்பு, பிசிஒஎஸ், பிசிஒடியை குணப்படுத்தக் கூடியது.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் சரியான முட்டை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது. பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி உள்ள பெண்கள் நிவாரணம் பெற உணவில் இலவங்கப்பட்டை சேர்ப்பதால் கருப்பை கோளாறுகள் நீங்கி குழந்தைப் பேறுகிடைக்கும். மாதவிடாய் காலத்து அதிகமான இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது என்று கூறப்படுகிறது.
எப்படி உபயோகிப்பது
இலவங்கப்பட்டையை தேனில் கலந்து சப்பாத்திக்கு தோசைக்கு சைடிஸ்ஸாக சாப்பிடலாம்.
இலவங்கப்பட்டையை தேநீராக்கி குடிக்கலாம்.