புதுவையில் 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம்
1 min read7 thousand per month for those above 100 years of age in Puduvai
29.8.2022
புதுச்சேரி மாநிலத்தில் 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
100 வயதுக்கு மேல்..
புதுச்சேரி மாநிலத்தில் 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர் சிவா, முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல் அமைச்சர் ரங்கசாமி, முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
90 வயது முதல் 100 வயது வரை உள்ளவர்களுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாயும், 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் கூறினார். கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால், மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் முதல் அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.