பசு மாட்டை தேசிய விலங்காக அறிவிக்கக்கோரி மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
1 min read
Petition to declare cow as national animal dismissed in Supreme Court
10.10.2022
பசு மாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டுமென மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தேசிய விலங்கு
இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது. இந்த நிலையில், பசு மாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டுமென கோவன்ஷா சேவா சடன் என்ற அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்கே கவுல் மற்றும் அபே எஸ் ஒஹா ஆகியோர் அடக்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தான் கோர்ட்டின் வேலையா? அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை நீங்கள் ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? எந்த அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது? நீங்கள் நீதிமன்றத்திற்கு வருவதால் நாங்கள் சட்டத்தை காற்றில் பறக்கவிட வேண்டுமா? என மனுதாரருக்கு சரமாரி கேள்வி எழுப்பினர்.
தள்ளுபடி
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், மனு தாக்கல் செய்த மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். கோர்ட்டின் எச்சரிக்கையை தொடர்ந்து மனுவை திரும்பப்பெறுவதாக மனுதாரர் தெரிவித்தார். இதனையடுத்து, பசு மாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டுமென தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.