ஜி 20 அடுத்த மாநாட்டை நடத்துவதற்கு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது- லோகோ வெளியிட்டார் பிரதமர் மோடி
1 min read
India awarded to host next G20 summit – PM Modi unveils logo
16.11.2022
இந்தோனேசியாவில் ஜி 20 மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த ஆண்டு மாநாட்டை நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பொறுப்பை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்.
ஜி 20 மாநாடு
ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த மன்றத்தின் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் நடைபெற்றுறது. ’ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம்’ என்ற மையக் கருத்தின் அடிப்படையில் இந்த ஜி 20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் என 3 தலைப்புகளின் கீழ் இந்த மாநாட்டின் மூன்று அமர்வுகள் நடைபெற்றன. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு விவாதித்தனர்.
இந்தியாவிடம்…
கடைசி நாளான இன்று அடுத்த ஆண்டு ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பேற்கும் இந்தியாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பிரதமர் மோடியிடம், தலைமைப் பொறுப்பை இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ வழங்கினார்.
ஜி 20 மாநாட்டின் பிரதான குறிக்கோளாக பெண்கள் தலைமையிலான வளர்ச்சியைப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
“லோகோ” வில் தாமரை
ஓர் ஆண்டு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, உலகளாவிய பிரச்சினைகளான பருவநிலை மாறுபாடு, தீவிரவாதப் பிரச்சினை, கடன்பிரச்சினை, கொரோனா தாக்கம், உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண முயலும். வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட படத்தில் ஜி 20 லோகோவில் தாமரை சேர்க்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக இந்த இலச்சினை இந்திய தேசியக் கொடியின் 4 நிறங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பூமி தாமரை மீது அமர்ந்திருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 7 இதழ்களும் உலகின் 7 கண்டங்களும் ஜி20 மாநாட்டில் ஒன்றிணைவதை குறிக்கிறது. இதில் உள்ள பூமி, இந்தியாவின் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் கொள்கையைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி பேச்சு
”எரிபொருள் தடையால், இந்தோனேசியாவில் நடந்து வரும் ஜி-20 மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் மோடி பேசியதாவது:-
டிஜிட்டல் மாற்றம் என்பது நமது சகாப்தத்தின் குறிப்பிடத்தக்க மாற்றமாக இருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்துவது வறுமைக்கு எதிரான பல சகாப்தகால உலகளாவிய போராட்டத்தின் சக்தியை பெருக்கும். காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் டிஜிட்டல் தீர்வுகள் உதவியாக இருக்கும். இந்தியாவில் டிஜிட்டல் அணுக்கலை பொதுவெளியில் உருவாக்கி இருக்கிறோம். ஆனால் சர்வதேச அளவில் இன்னும் பெரிய டிஜிட்டல் பிளவு உள்ளது.
டிஜிட்டல் கட்டமைப்பை உள்ளடக்கியதாக உருவாக்கினால் அது சமூக, பொருளாதார மாற்றங்களை கொண்டு வரமுடியும் என்பது இந்தியாவின் கடந்த சில ஆண்டுகால அனுபவம் காட்டுகிறது. இந்தியா டிஜிட்டல் பொது பொருட்களை உருவாக்கி உள்ளது. அதன் அடிப்படை கட்டமைப்பு ஜனநாயக கொள்கைகளை கொண்டுள்ளது. ஜி-20க்கு தலைமை ஏற்கும் இந்தியாவின் கருப்பொருளாக ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று இருக்கும். டிஜிட்டல் மாற்றத்தின் பலன்கள் மனித இனத்தின் சிறிய பகுதிக்கு மட்டும் செல்லக்கூடாது என்பது ஜி-20 தலைவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.