திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு 20 சிறப்பு ரெயில்கள்
1 min read20 special trains for Tiruvannamalai Karthikai Deepa Festival
29.11.2022
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையட்டி 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை திருவிழா
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது. வரும் 6ந் தேதி மகாதீபத்திருவிழா நடைபெறவுள்ளது. அதில் தமிழகம் வெளிமாநிலங்களிலிருந்து 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக மன்ற கூட்டரங்கில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் வீர்பிரதாப்சிங் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீ.வெற்றிவேல், கோட்டாட்சியர் மந்தாகினி உள்பட அனைத்து துறை அரசு அலுவலரகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்காலிக பேருந்து நிலையம்
கார்த்திகைதீபத்திருவிழாவையட்டி கிரிவலப் பாதை மற்றும் 12 தற்காலிக பேருந்து நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம், நகராட்சி, கோவில் ஊராட்சி ஆகிய துறைகளின் மூலம் குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளன. வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் 2600 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
101 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 2221 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2700 சிறப்பு பேருந்துகளும் வரும் 5ந் தேதி முதல் 8ந் தேதி வரை 4 நாட்கள் 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. மேலும் 54 இடங்களில் பக்தர்களின் வசதிக்காக வாகனங்கள் நிறுத்த கார்பார்க்கிங் அமைக்கப்படவுள்ளது.
மலையேறும் பக்தர்கள் 2500 பேருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
பாதுகாப்ப வசதிக்காக 12 ஆயிரம் போலீசாரும் மேலும் கூடுதலாக 2000 போலீசும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு டிக்கெட் பரணி தீபத்திற்கு 500ம் மகாதீபத்திற்கு 600ம் ஆகமொத்தம் 1100 கட்டண டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளது.
வருகிற 6ந் தேதி கோவிலில் அன்று அதிகாலை 4 மணிக்கு நடைபெறும் பரணி தீபத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களும் அன்று மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. இதற்கு கோவிலில் 6 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர். டிசம்பர் 6ந் தேதி பாபர் இடிப்பு தினத்தையட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
உள்ளூர் விடுமுறை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “திருவண்ணாமலை நகரம், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் காலீத்திகை மகா தீபத் திருவிழா 6ந்தேதி (செவ்வாய்) அன்று நடைபெறுவதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் மேற்படி அறிவிக்கப்பட்ட உள்ளுர் விடுமுறைக்கு பதிலாக வரும் 12ந்தேதி (சனிக்கிழமை) அன்று இயங்கும் என்றும் டிசம்பர் 6 ஆம் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கரூவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான
ஊழியர்களை கொண்டு இயங்கும்” என்று கூறியுள்ளார்.