அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
1 min readTemporary teachers can be appointed in government schools – School Education Department notification
3.1.2023
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இல்லம்தேடி கல்வி
தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தற்காலிகமாக பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் தேவையுள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் இந்த கல்வியாண்டு முடியும் வரை, அதாவது ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை பணி அமர்த்தலாம்.
இந்த பணியினை வருகிற 9-ந்தேதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பணியமர்த்தும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்விவரம் வருமாறு:-
- இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தகுதியுடையவராக இருப்பின் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
- பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000-ம் மதிப்பூதியம் வழங்கப்படும்.
- இல்லம் தேடி கல்வி பணிடிகளில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும், பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக பணிவிடுப்பு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.