இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட
நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை
1 min read
Captured by the Sri Lankan Navy 12 Naga fishermen freed
17.3.2023
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகையை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது,
நாகை மீனவர்கள்
நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த விஜயா எனபவருக்கு சொந்தமான விசைப்படகில் இருந்து கடந்த 7-ம் தேதி நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த சாம்பசிவம் மகன் ரவி(வயது40), ஆனந்தமணி (44), ராஜா (32), வீரையன் மகன் ரவி (48), மதிபாலன் (36), காத்தலிங்கம் (50), ராமமூர்த்தி (38), அன்பு (32), வேல்மயில் (48), கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரகு (38), தினேஷ்(26), சித்திரவேல் (42) ஆகிய 12 பேர் விசை படகில் சென்றனர்.
கடந்த 12-ம் தேதி அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 பேரையும் கைது செய்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
விடுதலை
பின்னர் பருத்திதுறை நீதிமன்றத்தில் 12 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை இன்று(17-ம் தேதி) வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து 12 பேரும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 பேரையும் விடுதலை செய்து இலங்கை பருத்திதுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் விசைப்படகு இலங்கை நாட்டின் உடைமையாக்கப்பட்டது. இதை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட 12 பேரும் நமது நாட்டின் தூதரக அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு சில நாட்களில் நாகை திரும்ப உள்ளனர்.