June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை பயமுறுத்திய போலீஸ்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram scared the police/ comedy story/ Tabasukumar

18.3.2023
கண்ணாயிரம் உடலில் எண்ணை தேய்த்துக்கொண்டு குற்றாலத்தில் குளிக்கச்சென்றதால் விரட்டியடிக்கப்பட்டார். ஓட்டலுக்கு வந்த அவரிடம் அவரது மனைவி பூங்கொடி அவர் உடலில் உள்ள எண்ணையை துடைத்துவிட்டு சாப்பிட்டுவிட்டு மதியம் மீண்டும் குளிக்கச்செல்லலாம் என்று சொல்ல கண்ணாயிரம் தன் உடலில் உள்ள எண்ணையை துடைத்துவிட்டு சாப்பிட தயாரானார்.
மீன் குழம்பு சாப்பாட்டை சாப்பிட்டபோது உரைத்ததால் மோர் பாக்கெட்டை உடைத்து குடித்தார். பின்னர் வேஸ்டா போயிடக்கூடாது என்று ரசபாக்கெட்டையும் எடுத்து குடிக்க இரண்டும் சேர்ந்து கண்ணாயிரம் வயிற்றை கலக்கியது. பூங்கொடி சாப்பிட்டுவிட்டு அருவியில் குளிக்க தயாராக புறப்பட்டபோது கண்ணாயிரம் பாத்ரூம் சென்று வருகிறேன் என்று உள்ளே சென்றார் வெளியேவரவே இல்லை.
பூங்கொடி கதவை தட்டி என்னங்க ஆச்சு..மோரையும் ரசத்தையும் ஒண்ணா குடிக்காதீங்கன்னு சொன்னா கேட்டாதான..இப்பம் வெளியே வராம உள்ளே இருக்கிய என்று கத்தினார்.
உடனே கண்ணாயிரம் வெளியே வர்ரதாலே நான்வெளியே வரமுடியல..கொஞ்சம் பொறு வந்திடுறேன் என்றார்.
பூங்கோடி ஐந்து நிமிடம் காத்திருந்தார்.
திடீரென்று ஏங்க..நீங்க உள்ளே இருங்க..நான் குளிக்கப்போறேன் என்று பூங்கொடி சொல்ல..கண்ணாயிரம் இதோ வந்திட்டேன் என்றபடி கதவை திறந்தார்.
அப்பாட என்னபாடு படுத்திட்டு..ம் இனி மோரை குடிக்கக்கூடாது என்று தள்ளாடியபடி அறைக்குள் வந்தார்.
வயிற்றை தடவி பார்த்தபடி..ஆ..வயிறு எவ்வளவு குறைஞ்சுபோச்சு..வா.. குளிக்கப்போகலாம் என்றபடி நடந்தார்.
பூங்கொடி சரி..வெளியே வாங்க கதவை பூட்டுவோம்..என்று சொல்லி கதவை பூட்டினார்.
கண்ணாயிரம் மெல்ல நடந்தார். வயிறு மீண்டும் கடமுடா என்க கண்ணாயிரம் மெல்ல வயிற்றை தடவிவிட்டபடி அமைதியாக இருக்கணும் சரியா..சும்மா சும்மா சத்தம் போடக்கூடாது என்று சொல்லியபடி நடந்தார்.
பூங்கொடி பின்னால் நடந்துசென்றார்.

கண்ணாயிரம்மெல்ல நடக்க ஆரம்பிக்க பூங்கொடி அவரிடம் என்ன வேகமாக நடங்க என்க கண்ணாயிரம் அவரிடம் வேகமாக நடந்தா சிக்கலாகிடும் விவரம் தெரியாம கத்தாதே நான் மெல்ல வர்ரேன் என்றார்.
சரி வாங்க என்றபடி பூங்கொடி நடக்க கண்ணாயிரம் வயிற்றை பிடித்தபடியே வந்தார்.
அப்போது சுடிதார்சுதா மற்றும் பயில்வான் ஆகியோர் அங்குவர என்ன கண்ணாயிரம் வயிற்றிலே பிரச்சினை என்று கேட்க ஒண்ணுமில்ல..சின்னபிரச்சினை என்று சமாளித்தார்.
அவர் கஷ்டம் அவருக்குத்தானே தெரியும். திருப்பி ஓட்டலுக்கு ஓடமுடியாதே.. அவர் தயங்கி தயங்கி நடந்தார்.
மற்றவர்கள் உற்சாகமாக இரண்டாம் முறையாக குளிக்கப்போகிறோம் என்று வேகமாக நடந்தார்கள்.

காலையிலே அதிகம் குளிக்கமுடியல..இப்பம் நல்லா குளிக்கணும் என்றபடி சுடிதார் சுதா நடக்க.. கண்ணாயிரம் மெல்ல நான் காலையிலே குளிக்கவே இல்லை தெரியுமா என்க..பூங்கொடி ..அதைப்பார்த்து அங்கே என்ன சத்தம் என்று கத்த கண்ணாயிரம்.. ஒண்ணுமில்ல.. சும்மா.. என்றபடி சுடிதார்சுதாவை தவிர்த்துவிட்டு முன்னே ஓடினார்.
அருவியை நெருங்க நெருங்க..காலை நேரத்தைவிட அதிக சத்தம் கேட்டது. ஆ..இப்போ அதிக தண்ணீ விழுது நல்லா குளிக்கலாம் என்று கண்ணாயிரம் மகிழ்ச்சியில் துள்ளினார். வயிற்றையும் பிடித்துக்கொண்டார்.
கொஞ்ச தூரம் நடந்து அனைவரும் ஆர்வமாக அருவியை நெருங்கிச்சென்றார்கள்.
அவ்வளவுதான் போலீசாரின் விசில் சத்தம் பறந்தது. போங்க..போங்க..யாரும் அருவியிலே குளிக்கக்கூடாது என்று விரட்டியடித்தார்கள்.
கண்ணாயிரம் மலங்க மலங்க விழித்தார். சார்.. நானா எண்ணை தேய்ச்சிட்டு வந்தேன்னு காலையிலே விரட்டினிய நியாயம். இப்ப எண்ணையை துடைச்சிட்டு வந்திருக்கேன். இப்போ விரட்டுறது நியாயமா என்று கெஞ்சினார்.
போலீஸ்காரர் கோபத்தில் போய்யா..அருவியிலே வெள்ளம்..அதிலே குளிச்சா இழுத்திட்டுப்போயிடும் ..ஓடு..ஓடு என்று விரட்டினார்.
கண்ணாயிரத்துக்கு ஒன்றும் ஓடவில்லை.எப்படி..இங்கே வெயில் அடிக்கு.. பிறகு எப்படி வெள்ளம் என்று யோசித்தபடி நின்றார்.
போலீசாரின் பிரம்படி அவர் தோளில் சுளீரென்று பட கண்ணாயிரம் கதி கலங்கி ஓடினார்.

என்னடா..நாம எங்கே போனாலும் நம்மை துன்பம் துரத்துது என்றபடி ஒரு மரத்து நிழலில் ஒதுங்கி நின்றார்.
இந்த நேரத்தில் அருவியில் வெள்ளத்தில் மூழ்கி இறந்த இரண்டு பேர் உடலை போலீசார் மீட்டு தூக்கிச்சென்றவண்ணம் இருந்தனர். அப்போது கண்ணாயிரத்தை காணாமல் பூங்கொடி தவிக்க.. ஏங்கே அருவிக்குள்ளே போயி என்ன ஆனாரோ என்று பயந்தார்.
கண்ணாயிரத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் சொல்ல அவர்கள் ஒலிபெருக்கியில் புதுவையை சேர்ந்த கண்ணாயிரம் எங்கிருந்தாலும் போலீஸ்நிலையத்துக்கு வருக..என்று கனத்த குரலில் சொன்னார்கள்.
அதைகேட்ட கண்ணாயிரம்..ஆ..நான் என்ன தப்பு பண்ணுனேன்..போலீஸ்நிலையத்துக்குப்போக என்று முணங்கியபடி நிற்க அவர் முதுகை தட்டியது ஒரு கை.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.