கண்ணாயிரத்தை ஏலம் விட்ட போலீசார்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
Cops who auctioned off a million dollars/ comedy story/ Tapasukumar
22.3.2023
கண்ணாயிரம் தன் உடலில் எண்ணை தேய்த்துக்கொண்டு காலையில் குற்றால அருவியில் குளிக்கச் சென்றபோது போலீசாரால் அடித்துவிரட்டப்பட்டார். பின்னர் எண்ணையை துடைத்துவிட்டு மதியம் தன் மனைவி பூங்கொடி மற்றும் சுடிதார்சுதா பயில்வான் ஆகியோருடன் இளைஞர்கள் புடை சூழ அருவியில் குளிக்கச்சென்றார்.
அப்போது அருவியில் வெள்ளம் வந்ததால் குளிக்க வந்தவர்களை போலீசார் விரட்டினார்கள். ஆனால் கண்ணாயிரம் நான் காலையில் குளிக்கவில்லை. மதியம் குளிக்கவிடுங்கள் என்று போலிசாரிடம் வாக்குவாதம் செய்ததால் முதுகில் விழுந்த அடிதாங்காமல் ஒரு மரத்தின் அடியில்போய் பதுங்கி நின்றார்.
இந்த நிலையில் அருவி வெள்ளத்தில் மூழ்கி இரண்டு பேர் இறந்ததால் ஏற்பட்ட பதட்டம் அதிகரிக்க கண்ணாயிரத்தை பூங்கொடி மற்றும் பலர் தேடிவந்தனர்.
இந்த நிலையில் புதுவையை சேர்ந்த கண்ணாயிரம் எங்கிருந்தாலும் போலீஸ் நிலையத்துக்கு வரவும் என்று போலீசார் ஒலிபெருக்கியில் கனத்த குரலில் அறிவித்தனர். போலீசார் ஏன் கூப்பிடுறாங்கன்னு தெரியலையே என்று கண்ணாயிரம் குழம்பி நின்ற வேளையில் ஒரு கை அவர் முதுகை தட்டியது. போலீசா இருக்குமோ என்று கண்ணாயிரம் திடுக்கிட்டு திரும்பியபோது அங்கே சுடிதார்சுதா நின்றுகொண்டிருந்தார்.
எங்கே..உங்களை எங்கெல்லாம் தேடுறோம்..இங்கே வந்து பதுங்கி நிக்கிய என்று சத்தம் போட்டார்.
கண்ணாயிரம்..நான் போலீசார் விரட்டியதால் ஓடிவந்திட்டேன் என்று சொல்ல சரி சரி வாங்க என்று சுடிதார்சுதா சொன்னபோது போலீசார் மீண்டும் ஒலிபெருக்கியில்..புதுவையை சேர்ந்த கண்ணாயிரம் எங்கிருந்தாலும் போலீஸ் நிலையத்துக்கு வரவும். அருவியில் மூழ்கி இறந்த இரண்டு பேர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. அருவியில் மூழ்கிய மேலும் இரண்டு பேரை தேடிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் உடல் இன்னும் கிடைக்கவில்லை. கண்ணாயிரம் எங்கிருந்தாலும் போலீஸ்நிலையத்துக்கு வரவும்..என்று போலீசார் அறிவித்தனர்.
.கண்ணாயிரம் போலீஸ்நிலலயத்துக்கு போவதா..இல்லை சுடிதார் சுதாவோடு போவதா என்ற குழப்பத்தில் இருந்தார்.
அந்த நேரத்தில் ஒலிபெருக்கியில் முக்கிய அறிவிப்பு.. புதுவையை சேர்ந்த கண்ணாயிரத்தை காணவில்லை. பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. எனவே அவரை யாராவது பார்த்தால் அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரவும். அவரது அடையாளம்..வயது 50.. உயரம் சுமார்5 அடி இருக்கும். நிறம்..கருப்பு.வெள்ளை வேட்டி கட்டியிருப்பார். தோளில் ஒரு வேட்டியை தொங்கவிட்டிருப்பார். பார்க்க அப்பாவி போல் இருப்பார்.. ஆனால் திருதிருவென முழிப்பார். உடனடியாக பிடித்துவரவும் என்று அறிவிக்கப்பட்டது.
என்ன என்னப்பத்தி அரையும் குறையுமா சொல்லுறாங்க.. என் பெருமையை பத்தி சொல்லமாட்டேங்கிறாங்க.. அப்படின்னா நான் எப்படி போவேன். என்னை புகழ்ந்து நாலு வார்த்தை சொல்லலாமுல்ல..என்ன ஓர வஞ்சனை.. …என்னைப்பத்தி போலீசில யாரு தப்பா சொல்லிக்கொடுத்தது என்று திட்டினார்.
சுடிதார் சுதா அவரிடம் சரி..போலீஸ் நிலையத்துக்கு போறீயளா என் கூட வாரியளா என்று கேட்க..கண்ணாயிரம் கோபத்துடன்.. நான் போலீஸ் நிலையத்துக்கு போகமாட்டேன்..நான் திருதிருன்னு முழிப்பேன்னு சொல்லுறாங்க..என் முழி அப்படியா இருக்கு..நான் அப்பாவியா .நான் எவ்வளவு பெரிய அறிவாளி என்று தன்னைத்தானே புகழந்துகொண்டார்.
அப்போது ஒலிபெருக்கியில்..புதுவையை சேர்ந்த கண்ணாயிரத்தை பற்றி இன்னும் எந்த தகவலும் வரவில்லை. யாரும் அவரை கண்டுபிடித்து ஒப்படைக்கவில்லை. இன்னும் பத்து நிமிடத்தில் அவரை பிடித்து யாராவது போலீஸ் நிலையத்துக்கே குண்டுகட்டாக தூக்கிவந்தால் தக்கபரிசு வழங்கப்படும்..என்று கண்ணாயிரம் மனைவி பூங்கொடி அறிவித்துள்ளார். பின் குறிப்பு…கண்ணாயிரத்தின் அடையாளம் திருட்டுமுழி முழிப்பார்…என்று ஏலம் விடுவதுபோல் அறிவித்தனர்.
அதைக்கேட்டதும் கண்ணாயிரம் என்ன கொடுமை இது..என்னை கண்டுபிடிச்சா பரிசுன்னு பூங்கொடியே சொல்லுறா…எவனாவது என்னை பிடிச்சிக்கொடுத்து பரிசை வாங்கிட்டா என்ன பண்ணுறது…என்று யோசிக்கும்போதே ஒருத்தன் கண்ணாயிரத்தை சுற்றி சுற்றிப்பார்த்தான்.
யாரய்யா நீ என்று கண்ணாயிரம் கேட்க..அவனோ. ஆ..அதே திருட்டு முழி..கருத்த உடம்பு..தோளில் வேட்டி..ம் விடமாட்டேன்..பரிசை வாங்கியேத்தீருவேன் என்று கண்ணாயிரத்தின் மீது பாய கண்ணாயிரம்.. அடா வந்தது ஆபத்து.. எவனும் நம்மளை பிடிச்சிக்கொடுத்து பரிசுவாங்குவதற்குள்ள நாமே ஓடிபோய் பரிசை வாங்கிடுவோம் என்று நாலு கால்பாய்ச்சலில் அங்கிருந்து ஓடினார்.
அவரை அடையாளம் கண்டுகொண்டவர் பின்னால் துரத்தினார். கண்ணாயிரம் விடுவாரா என்ன..அதிக வேகமாக ஓடினார். அப்போது ஒலிபெருக்கியில்..கண்ணாயிரத்தை கண்டுபிடிக்க பத்து நிமிடம் கொடுக்கப்பட்டது. அதில் ஐந்து நிமிடம் முடிந்துவிட்டது. இன்னும் ஐந்து நிமிடமே உள்ளது என்று சொல்லப்பட்டது.
அந்த குரல்வந்த திசையை நோக்கி கண்ணாயிரம் ஓடினார். பின்னால்வந்தவன் அவர் வேட்டியை பிடித்து இழுக்க கண்ணாயிரம் தடுமாறினார். கண்ணாயிரம் வேகம் கொண்ட மட்டும் இழுக்க வேட்டி கிழிந்து பாதி அவர் கையிலும் மீதி பின்னால் ஓடிவந்தவன் கையிலும் இருக்க..கண்ணாயிரம் பாதி வேட்டியுடன் போலீஸ்நிலையத்துக்கு ஓடிச்சென்றார்.
அப்போது…. (தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.