இந்தியை விட தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது-வடாமாநில மாணவிகளிடம் கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
1 min read
Tamil language is more ancient than Hindi-Governor RN Ravi proud of Vadamana students
13.4.2023
இந்தி மொழியை விட தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது வடமாநிலத்தில் இருந்து வந்த மாணவ-மாணவிகளிடம் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
பனாரசில் தமிழ்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பாரம்பரியமிக்க பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள். அவர்களில் 20 பேர் தமிழ்நாடு தரிசனம் என்ற பெயரில் தமிழகத்தின் பெருமைகளை நேரில் அறிந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளனர்.
கடந்த 10 நாட்களாக பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட அவர்கள் இன்று கவர்னர் மாளிகைக்கு வந்தனர். அவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழை கற்றுக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள். இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறு உண்டு. இந்தி மொழியை விட தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது.
சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது. தமிழ் இல்லாமல் பிற மொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக்கொள்ள நினைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தமிழை ஆழமாக படிக்க வேண்டும். தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து ராஜ் பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும்.
2047-ம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும், உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் விளங்கும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயிலும் மாணவர்கள் நிச்சயம் உயர்கல்வியை தமிழில் பயில வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள். திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கும் நூல். திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும். திருக்குறள் போல் தமிழில் பல இலக்கியங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
திருக்குறள், இந்தி மற்றும் நேபாளி மொழிகளில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. அதை மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பரிசளித்தார்.