அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி பேட்டி
1 min read
Interview with Rahul Gandhi who vacated the government bungalow
22.4.2023
கடந்த 19 ஆண்டாக வசித்து வந்த டெல்லி அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்தார். அப்போது அவர் உண்மையைப் பேசுவதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார் என்றார்.
ராகுல்காந்தி
பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி பதில் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், கடந்த 4 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அரசு பங்களாவில் தொடர்ந்து வசித்து வந்துள்ளேன்.
கடந்த காலங்களில் எனக்கு நிறைய நல்ல நினைவுகளை இந்த வீடு அளித்துள்ளது. அதற்கு நன்றி, அரசு உத்தரவுக்கு நான் கட்டுப்படுவேன் என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன் சாலையில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி காலி செய்தார். இதையடுத்து, அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தி இன்று அரசு பங்களாவை மக்களவைச் செயலகத்தில் ஒப்படைத்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த வீடு எனக்கு இந்திய மக்களால் வழங்கப்பட்டது. உண்மையைப் பேசுவதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார். என்னிடமிருந்து பறிக்கப்பட்டாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் 10, ஜன்பத்தில் சிறிது காலம் தங்கிவிட்டு வேறு வழியைக் கண்டுபிடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி கூறுகையில், இந்த நாடு ராகுல் காந்தியின் வீடு. ராகுல் காந்தி மக்கள் மனதில் என்றும் தங்கியிருப்பார் என தெரிவித்துள்ளது.