“ஜெய்ஹிந்த்” செண்பகராமன் பிள்ளை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
1 min readTribute to ‘Jaihind’ Senpakaraman Pillai statue on 89th anniversary
சென்னை, மே27
ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளையின் 89வது நினைவுதினத்தையட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
செண்பகராமன் பிள்ளை
சுதந்திர போரட்டத்தின் போது “ஜெய்ஹிந்த்” என்ற மந்திர கோஷகத்தை எழுப்பியவர் தமிழர் ஒருவர் ;
அவர்தான் செண்பகராமன் பிள்ளை. இவரை பற்றிய தியாக வரலாற்றை முதலில் காண்போம்..
இவர் 1891ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ந் தேதி திருவனந்தபுரத்தில் சின்னசாமி பிள்ளை மற்றும் நாகம்மாளுக்கு, மகனாகப் பிறந்தார். நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட சின்னசாமி திருவாங்கூர் சுதேச அரசாங்க சேவையில் தலைமை கான்ஸ்டபிளாக இருந்தார். இதனால் அவரது குடுபம்ம் திருவனந்தபுரத்தில் இருந்தது. செண்பகராமன் 15 வயதில், ஆஸ்திரியா சென்றார். அங்குள்ள ஒரு பள்ளியில், பள்ளிக் கல்வி பயின்றார். பள்ளி கல்வி முடித்ததும், பொறியியல் டிப்ளமோ படித்த போது, முதல் உலகப் போர் ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்தபடியே தன்னை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்.
1914ம் ஆண்டு செப்டம்பர் மாதம், செண்பகராமன் பிள்ளை சூரிச்சில் ‘சர்வதேச இந்திய சார்பு குழுவை’ குழுவின் தலைவராகவும் இருந்தார். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய சுதந்திரம் தொடர்பான சங்கம்‘இந்திய சர்வதேச குழு’ ஒன்று ஏற்கனவே அமைந்துள்ள விவரத்தை அறிந்தார். சர்வதேச இந்திய சார்பு குழுவை, இந்திய சர்வதேச குழுவுடன் இணைத்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில், பல கிளைகளைத் திறந்தார்.
வெளிநாட்டில் இந்திய சுதந்திர துடிப்புடன் வசித்து வந்த இந்திய புரட்சியாளர்களை ஒன்றிணைத்த செண்பகராமன், ஜெர்மன் நாஜிகளுடன் உலகப் போரில் அவர்களுக்கு ஆதரவளிக்க ஒப்பந்தம் செய்தார்.
1914ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை துறைமுகத்தின் இரவோடு இரவாக எம்டன் கப்பல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது அல்லவா? அந்த தாக்குதலை நடத்தியது செண்பகராமன் பிள்ளை தலைமையிலான இருந்த படைதான். தாக்குதல் நடத்திய கப்பல் முதலில் இலங்கை செல்வதாகத்தான் இருந்தது. ஆனால் கடல் கொந்தளிப்பு காரணமாக அங்க செல்லாமல் சென்னை துறைமுகத்தை தாக்க முடிவு செய்தனர். அப்போது வெள்ளையர் கட்டுப்பாட்டில் இத்துறைமுகம் இருந்ததால் அதை தாக்க எண்ணினார்கள். மொத்தம் 130 குண்டுகளை வீசினார்கள். முதலில் வீசிய குண்டுகள் மூலம் பர்மா செல் பகுதி பற்றி எரிந்தது. அந்த இடத்தில் தற்போது இந்திய ஆயில் கம்பெனி உள்ளது.
அடுத்து சென்னை ஐகோர்ட்டு மீது குண்டு வீசப்பட்டது. இதில் காம்பவுண்டு சுவர் இடிந்தது. பின்னர் ஜார்ஜ் கோட்டை மீது குண்டு வீசப்பட்டது. அந்த குண்டு மணல் பகுதியில் விழுந்து வெடிக்கவில்லை. அது தற்போது சென்னை அருங்காட்சியத்தில் உள்ளது.
எம்டன் கப்பல் குண்டு வீசியதில் எந்த தமிழர்களும் இறக்கவில்லை. வெள்ளையர்கள் பகுதியில் வீசியதால் 5 வெள்ளைக்காரர்கள் இறந்தனர். சென்னையில் குண்டு வீசிய பின் செண்பகராமன் புதுச்சேரிக்கு சென்றார்.
பின்னர் 1915ல், செண்பகராமன் இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகவும் பதவி ஏற்றார்.
இந்திய சுதந்திரத்திற்கான உணர்வை, இந்தியர்களிடம் எழுப்பும் முதல் மந்திரமான “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கத்தை வழங்கிய இந்தியர், ‘செண்பகராமன் பிள்ளை’ ஆவார்.
முதல் உலகப் போரில் ஜெர்மனி தோல்வி அடைந்தது, செண்பகராமனை சோர்வடைய செய்தது. ஜெர்மனிய படையை பயன்படுத்தி, இந்தியாவை ஆட்சி செய்திருந்த ஆங்கிலேய படைக்கு எதிராக நிறுத்தி, கிளர்ச்சி செய்ய, அவரது திட்டமும் தோல்வி அடைந்தது.
ராணுவ சீருடையுடன் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு, தன்னார்வலர் படைப் பிரிவை செண்பகராமன் பிள்ளை, ‘இந்திய தேசிய தன்னார்வப் படை’ என்ற பெயரில் நிறுவினார்.
1919ல் வியென்னாவுக்கு வந்த சுபாஷ் சந்திர போஸ், செண்பகராமன் பிள்ளையை சந்தித்தார். பிள்ளையின் ‘இந்திய தேசிய தன்னார்வப் படை’யை கண்டு ஊக்கமடைந்தார்.
பிள்ளையின் இந்த அமைப்பிலிருந்து எடுக்கப்பட்ட யோசனையின் அடிப்படையை வைத்து, சுபாஷ் சந்திர போஸ் இரண்டாம் உலகப் போரின் போது, தனது ‘இந்திய தேசிய இராணுவத்தைத்’ தொடங்கினார். செண்பகராமனின் “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கத்தையே, தனது அமைப்பின் தாரக மந்திரமாகவும் வைத்தார்.
மணிப்பூரைச் சேர்ந்த லக்ஷ்மி பாயை பெர்லினில் சந்தித்த செண்பகராமன் 1931ல் மணந்தார்.
ஆரம்பத்தில், நாஜிக்கள் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்கள் பொது எதிரியான பிரிட்டிஷ§க்கு எதிராக போராட ஆதரவளித்தனர். ஆனால், முதல் உலகப் போரில், ஜெர்மனி தோற்கத் தொடங்கியதும், இந்தியப் புரட்சியாளர்கள் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கி, இந்திய நடவடிக்கைகள் குறித்து, நாஜிக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் தான், ஹிட்லர் இந்தியர்கள் தங்களை ஆளும் திறனற்றவர்கள், என குறைத்து பேசினார். ஹிட்லரின் இந்த சொல்லுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் செண்பகராமன், ஹிட்லரை இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்.
இது, நாஜிக்களுக்கு செண்பகராமன் மீது கோபத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, ஹிட்லர் உத்தரவின் படி, 1934ம் ஆண்டு மே 26ந் தேதி 42 வயதான செண்பகராமன் பிள்ளையின் உணவில், நாஜிக்கள் விஷம் வைத்து, அவரைக் கொன்றதாகக் கூறப் படுகிறது.
தன் கணவரின் மரணத்திற்கு பின்பு, நாஜிக்களிடம் பல துன்பங்களை அனுபவித்த லட்சுமிபாய், தன் கணவரின் அஸ்திகளையும், அவரது டைரி மற்றும் சில முக்கியமான ஆவணங்களையும் பத்திரமாக வைத்து, 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணுக்கு கொண்டு வந்தார்.
ஜெர்மனியில், நாஜிக்களிடமிருந்து தப்பித்த லட்சுமிபாய், பெர்லின், இத்தாலி, ஸ்பெயின் சென்று இறுதியில் மும்பை வந்தடைந்தார். செப்டம்பர் 16, 1966 அன்று, சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்ட, இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ்ஸில், செண்பகராமன் பிள்ளையின் அஸ்திகள் கொச்சினுக்கு கொண்டு வரப் பட்டது.
செண்பகராமனின் விருப்பப்படி, அவரது சாம்பலில் பாதி, அவரது சொந்த ஊரான நாஞ்சில் நாட்டில் (கன்னியாகுமரி) கடலிலும், மீதமுள்ளவை கேரளா ஆற்றிலும், கரைக்கப்பட்டன.
தியாகி செண்பகராமன் பிள்ளைக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 89வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது- சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் அவரது புகைப்படம் அங்கு அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரின் தங்கை பாப்பாத்தி அம்மாளின் பேரன் சேது சேஷன், ரமேஷ் பாபு சங்கர். தம்பி பேரன் ஜெயகுமார், ஆர்க்கிடெ உலகின் சக்கரவர்த்தி நாராயணராவின் பேரன் எல்.வெங்கடேஷ், தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன், பாரதியார் கொள்ளுபேத்தி உமாபாரதி, லப்லைன் டாக்டர் ராஜ்குமார், நாஞ்சில் வேளாளர்சங்க நிர்வாகிகள், அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியின்போது எல்.வெங்கடேசன் சென்னை துறைமுகத்தில் செண்பகராமன் பிள்ளையின் படம் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தோரணமலை முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.