June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

இளைஞர்களிடம் ஆங்கில திறன் குறைபாடு உள்ளது- துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி வலியுறுத்தல்

1 min read

Lack of English skills among youth- Governor R.N. Ravi emphasis

5.6.2023
தமிழகத்தில் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி பேசினார்.

துணைவேந்தர்கள் மாநாடு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாடு இன்று காலை தொடங்கியது. மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாநாடு தொடங்கியவுடன் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தேசிய கீதம், பாரதியார் பாடல் இசைக்கப்பட்டு மாநாடு தொடங்கப்பட்டது.
மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி, துணை வேந்தர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி விட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

முன்னேற்றம்

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வி முறையை இளைஞர்களின் திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். தமிழகத்தில் அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால், மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தேசிய கல்வி கொள்கையில், இளைஞர்களுக்கு, அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வேலை

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என்பது கிடைப்பது இல்லை. இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் பெரும்பாலும் ஆங்கில திறன் குறைபாடு உள்ளது. தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப தமிழகத்தில் கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். இதுதவிர பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்த மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த மாநாட்டில் தமிழ்மொழியில் கிடைக்காத பாடப்புத்தகங்கள், குறிப்பு புத்தகங்கள், ஆய்வு பொருட்கள் பல்கலைக்கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தமிழில் கற்பித்தல், கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் காணொலி மூலம் பங்கேற்று துணை வேந்தர்களுடன் கலந்துரையாடினார்.
பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ணா சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அலோக் குமார் ராய், இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் தலைவர் நாகேஸ்வரராவ் மற்றும் அனுவாதினி மொழி பெயர்ப்புக் கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்க ழகத்தின் துணை வேந்தர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணை வேந்தர்கள், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர். இன்று தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு நாளையும் நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினமே கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டிக்கு வந்துவிட்டார். ஊட்டி ராஜ்பவனில் வருகிற 9-ந் தேதி வரை தங்கியிருக்கும் கவர்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, முக்கிய கோவில்களுக்கும் செல்ல உள்ளதாக தெரிகிறது. இதனையொட்டி ஊட்டியில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *