கீழப்பாவூரில் லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்தது; போக்குவரத்து பாதிப்பு
1 min readA lorry hit an electric pole in Geezapavur; Traffic damage
8/6/2023
தென்காசி அருகே கீழப்பாவூரில் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்;டது.
லாரி
உசிலம்பட்டியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு வந்த லாரி பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் அரிசி ஆலை ஒன்றுக்கு வந்து கொண்டிருந்தது. சுரண்டை வழியாக வந்த இந்த லாரி கீழப்பாவூர் ஊருக்குள் வந்த பொழுது நெல் மூட்டைகள் சற்று சரிந்த நிலையில், சாலையின் அருகே இருந்த ஒரு மின் கம்பத்தில் உரசி மோதியது. இதில் மின் கம்பம் உடைந்து தொங்கியது.
இதுகுறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது, மின்சார ஊழியர்கள் விரைந்து வந்து மின் ஒயர்களை துண்டித்து லாரியை அப்புறப் படுத்தினர், இதனால் அந்த வழியாக பஸ் லாரி போன்ற பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் 2 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
தென்காசி மற்றும் சுரண்டை செல்லும் பஸ்கள் அனைத்தும் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. கீழப்பாவூர் ஊருக்குள் குறுகிய சாலைகள் உள்ளன. மேலும் இங்கு அதிகப் படியான அரிசி ஆலைகள் உள்ளன.
இந்த ஆலை களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து நெல் கொண்டு வரப்படுகிறது. அளவுக்கு அதிகமாக நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகளால் கீழப்பாவூரில் பல இடங்களில் இது போன்ற மின் கம்பங்கள் சேதமடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.