தென்காசி அருகே கள்ளக்காதலை கொன்ற பெண் தாயாருடன் கைது
1 min readWoman arrested along with her mother who killed a blacksmith near Tenkasi
8.6.2023
தென்காசி அருகே இலத்தூரில் கழிவு நீர் தொட்டியில் கிடந்த எலும்புக்கூடு பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் தொடர்புடைய தாய்-மகள், சிறுவன் ஆகிய 3 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
கழிவுநீர் தொட்டியில் எலும்புக்கூடு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா இலத்தூர் கிராமம் சுண்டகாட்டு தெருவில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை கடந்த சில மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தார். கடந்த 4 – ம் தேதி வாடகைக்கு விடுவதற்காக வீட்டை சுத்தம் செய்ய சென்றார்.
இதற்காக அந்த வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டி மூடியை திறந்த போது, அங்கு ஒரு மனித எலும்புக்கூடு கிடந்ததை கண்டு லட்சுமணன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் இலத்தூர் காவல்
நிலையத்திற்கு தகவல் கூறினார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கழிவுநீர் தொட்டியில் கிடந்த எலும்புக்கூடுகளை கைப்பற்றி பாளையங் கோட்டை அரசு மருத்துவ மனைக்கு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதல்
இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தது ஆணா, பெண்ணா?, எப்படி இறந்தார்? என தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
தடயவியல் துறை பரிசோதனையில் அந்த எலும்புக்கூடு ஒரு ஆணுடையது என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் துப்பு துலங்கியது. அதாவது, எலும்புக்கூடாக கிடந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரது மகன் மது (வயது 24) என்பது தெரியவந்தது.
எலும்புக்கூடு கிடந்த வீட்டில் மாரியம்மாள் (வயது 45) என்பவர் தனது மகள் திருமணமான பேச்சியம்மாள் என்ற பிரியா (24) உடன் வசித்து வந்தார். அப்போது, பிரியாவுக்கும், மதுவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் மது அடிக்கடி பிரியா வீட்டிற்கு சென்று உல்லாசத்துக்கு அழைத்தாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த பிரியா கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மது வீட்டிற்கு வந்தபோது, அவரை படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் மதுவின் உடலை வீட்டின் பின்னால் தோட்டத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் வீசிவிட்டு சிமெண்ட் மூடியால் மூடினர். பின்னர் அவர்கள் அந்த வீட்டை காலிசெய்து விட்டு அங்கிருந்து கோவைக்கு சென்றுவிட்டனர்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோவைக்கு சென்று பிரியாவையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாயார் மாரியம்மாள் மற்றும் 17 வயது சிறுவனையும் கைது செய்து அழைத்து வந்தனர்.
மது அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.