கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோயிலில் பாலாலயம்
1 min readBalalayam at Tiruvaleeswarar Temple in Keezappavur
9.6.2023
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த கோவிலை பராமரித்து கும்பாபிஷேகம் நடத்த அரசு ரூ 83 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு முதற்கட்ட பூஜைகள் நடைபெற்றன. கடந்த திங்கள் மாலை இந்த கோவிலில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், ம்ருத் ஸ்ங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், ரஷ்ஷாபந்தனம், வாஸ்து ஹோமம், ரக்ஷோக்ன ஹோமம், விமானம் கலாகர்ஷணம்,சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் கலாகர்ஷணம், முதற்கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை, நடைபெற்றது.
மறுநாள் காலை 7 மணி முதல் இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை காலை மணி 9.45 க்கு மேல் 10.15 மணிக்குள் கடக லக்னத்தில் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சலனம் செய்து பாலஸ்தாபனம் (பாலாலயம்) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் (நகைகள் சரிபார்ப்பு) வெங்கடேஷ், செயல் அலுவலர் ஆர்.முருகன், ஆய்வாளர் சேதுராமன், அர்ச்சகர்கள் ஆனந்தன், கிரிகுமார், ராமசாமி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த கோவிலில் 37 விக்கிரகங்கள் பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோவில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.