அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை
1 min read
Minister Senthilbalaji treated with ventilator support
22/6/2023
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து செல்லும்போது, அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால், அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவர்கள், அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய சிகிச்சை நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு ஆகியோரும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். செந்தில்பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 15-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.இந்நிலையில், மருத்துவர்கள் ஏற்கெனவே முடிவு செய்தபடி, நேற்று அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
வென்டிலேட்டர்
இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் இதயத்துக்கு 24 மணி நேரம் ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
24 மணி நேரத்துக்குப் பின் ஆக்சிஜன் உதவியுடன் சுவாசிப்பார். அதன்பின் செயற்கை சுவாசம் முழுவதுமாக நீக்கப்பட்டு, இயற்கையாக சுவாசிக்க துவங்குவார். அதன் பின்னர் இதயம் படிப்படியாக தாமாகவே செயல்பட தொடங்கும்.
அதுவரை ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு இதய துடிப்பின் அளவு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். 24 மணி நேரத்துக்குப் பின் வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு, அவருக்கு திரவு உணவு வழங்கப்பட உள்ளது என்று தெரிகிறது.