2 குழந்தைகள் சாக்கு மூட்டையில் கட்டி கடத்தல்- மேலும் காணாமல் போனவர்களின் நிலை என்ன?
1 min readKidnapping of 2 children in a sack- what about other missing persons?
30.9.2023
ஆந்திராவில் 2 குழந்தைகள் சாக்கு மூட்டையில் கட்டி கடத்தப்பட்டனர். அவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஏற்கனே காணாமல் போனவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
குழந்தைகள் கடத்தல்
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ராஜிபாளையம் பகுதியில் அழுக்கான கிழிந்த ஆடைகளை அணிந்த 2 வாலிபர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்கள் பெரிய சாக்கு மூட்டைகளை தோளில் சுமந்தபடி சென்றனர்.
இதனைக் கண்ட அந்த பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வாலிபர்களை மடக்கி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
மேலும் பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் 2 வாலிபர்களும் அங்கிருந்து மூட்டைகளுடன் ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.
அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை அவிழ்த்து பார்த்த போது அதில் 2 குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வாலிபர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
அவர்களை நெல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தைகளை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் பிடிபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அழுக்கான கிழிந்த ஆடைகளுடன் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர்கள் போல் சென்று அவர்கள் குழந்தைகளை கடத்தி சென்றது தெரியவந்தது.
குறிப்பாக தெருவில் விளையாடும் குழந்தைகளை மயக்க மருந்து தெளித்தும் கைக்குட்டையில் மயக்க பவுடர் வைத்து அதன் மூலமும் மயங்க செய்து சாக்கு மூட்டையில் கட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது.
10 குழந்தைகள்
பிடிபட்ட வாலிபர்களில் ஒருவர் இதுவரை 2 குழந்தைகளையும் மற்றொருவர் 10 குழந்தைகளையும் கடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட குழந்தைகளை நெல்லூர் காவாலி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் வைத்து கடத்தல் கும்பல் தலைவனிடம் குழந்தைகளை ஒப்படைத்துள்ளனர். அதற்கு ரூ.5 ஆயிரம் முதல் பணம் வாங்கியுள்ளனர்.
பணத்திற்கு பதிலாக மது பாட்டில்களையும் வாங்கியுள்ளனர்.
இதுவரை கடத்தப்பட்ட குழந்தைகள் என்ன ஆனார்கள்? அவர்கள் எங்கு உள்ளார்கள்? குழந்தைகளை வாங்கியவர்கள் யார்? என போலீசார் பிடிபட்ட 2 பேரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த குழந்தைகளை பிச்சை எடுக்கவும், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் உடல் உறுப்புகளை திருடி விற்பதாகவும் தகவல் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து குழந்தை கடத்தல் கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர்.
தற்போது மீட்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.