சிலிண்டரில் கியாஸ் கசிந்து வீடு தீப்பிடித்ததில் 2 பேர் பலி
1 min read
2 people died when gas leaked in the cylinder and the house caught fire
5.10.2023
நாமக்கல்லியில் சிலிண்டரில் கியாஸ் கசிந்து வீடு தீப்பிடித்தது. இதில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
தீ்ப்பிடித்தது
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள நரசிம்மர் சன்னதி தெருவில் கோபால்சாமி என்பவருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன.
இதில் ஒரு வீட்டில் தனலட்சுமி (வயது 62) என்பவரும் மற்றொரு வீட்டில் பார்த்தசாரதி (70) என்பவரும் வசித்து வந்தனர். இவர்கள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஊழியராக பணியாற்றி வந்தனர்.
இன்று காலை பார்த்தசாரதி வீட்டில் சிலிண்டரை தனியார் கியாஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் என்பவர் மாற்றி உள்ளார்.
அப்போது பக்கத்து வீட்டில் இருந்த தனலட்சமி தனது வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரில் கியாஸ் கசிவு இருப்பதாக கூறி சோதனை செய்து பார்க்கும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து அருண்குமார் சமையல் அறைக்கு சென்று கியாஸ் கசிவு ஏற்பட்ட சிலிண்டரை மாற்ற முயற்சி செய்தார். அருகில் தனலட்சுமி நின்று கொண்டிருந்தார்.
அப்போது அதிகமாக கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் கொளுந்து வீட்டு எரிந்தது. கதவு, ஜன்னல், துணிகள் அனைத்தும் எரிந்தது.
இந்த தீ விபத்தில் தனலட்சுமி, அருண்குமார் ஆகிய இருவரும் உடல் கருகி படுகாயம் அடைந்தனர்.
தனலட்சுமியின் வீட்டில் பிடித்த தீ மளமளவென பக்கத்து வீட்டை சேர்ந்த பார்த்தசாரதி வீட்டில் பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இதில் பார்த்தசாரதியும் சிக்கி படுகாயம் அடைந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வீட்டிற்குள் தீயில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த தனலட்சுமி, கியாஸ் நிறுவன ஊழியர் அருண்குமார், பார்த்தசாரதி மற்றும் இவரது மனைவி லதா ஆகியோரை மீட்டு போலீசார் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனலட்சுமி, பார்த்தசாரதி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். அருண்குமார், லதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.