June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கொம்புத் தேனுக்கு பயந்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram afraid of horn honey/ comedy story / Tabasukumar

11.10.2023
கண்ணாயிரம் அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு வரும்போது தேன் விற்பவர் மலைத்தேன் என்று பாட்டலில் விற்பனைக்கு கொண்டு வந்தார். அதைப்பார்த்த கண்ணாயிரம் என்ன மலைத் தேனா.. என்று ஆச்சரியமாக கேட்டார்.
பசுமாடு பால் கொடுத்தா பசும்பால் என்று சொல்கிறோம்..மலையிலிருந்து அருவிதான வரும்.. தேன் எப்படி வரும் என்று கேட்டார்.
அதற்கு தேன் விற்பவர் மலை பாறையில் தேனீ கட்டிய கூட்டிலிருந்து வரும் தேன் மலைத்தேன் என்க கண்ணாயிரம் அப்படியா என்று கேட்டார்.
அந்த நேரத்தில் கொம்புத்தேன் தெரியுமா என்று தேன் விற்பவர் கேட்க.. கண்ணாயிரம்.. இது என்னடா புது ரகமாக இருக்கு.. அந்த தேன்குடிச்சா கொம்பு முளைக்குமா.. அல்லது தேனிக்கு கொம்பு முளைச்சிருக்குமா என்று கேட்டார்.
அதற்கு தேன் விற்பவர்.. இது தெரியாதா.. கொம்பு என்றால் மாட்டுக்கொம்போ ஆட்டுக் கொம்போ அல்ல… கொம்பு என்றால் மரக்கிளை.. அதில் தேனீ கட்டிய கூட்டிலிருந்து கிடைக்கும் தேன் கொம்புத்தேன் என்று பதில் சொன்னார்.
உடனே கண்ணாயிரம்.. எல்லா தேனும் ஒண்ணுபோலத்தான இருக்கும். கொம்புத்தேன் என்று எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்க.. தேன் விற்பவர்.. அதுவா.. கொம்புத் தேன் என்றால் லேசா புளிக்கும்.. நீங்க வேணுமுன்னா குடிச்சுபாருங்க என்றபடி பையிலிருந்து ஒரு தேன் பாட்டிலை எடுத்து கொடுத்தார்.
கண்ணாயிரம் அந்த பாட்டிலை திறந்து லேசாக குடித்துப் பார்க்க நினைத்தபோது..ம்.. ஒரு வேளை கொம்புத் தேனை குடிச்சி நம்ம தலையிலே கொம்பு முளைச்சிட்டா..என்ன பண்ணுறது..எல்லோரும் கொம்பா அப்படியில்லா சொல்வாங்க.. ஆ.. அந்த வில்லங்கம் எல்லாம் வேண்டாம்.. கொம்புத்தேனே வேண்டாம். என்று கண்ணாயிரம் பின் வாங்கினார்.
மலைத்தேனே போதும் என்று ஓரு பாட்டில் வாங்கி பையில் வைத்துக்கொண்டார்.
அப்போது..பயில்வான்..என்ன சீக்கிரம் கிளம்புங்க.. ஊருக்கு புறப்படுவோம்.. மழை வருது என்று சொல்ல கண்ணாயிரம்.. ஆமா.. ஊருக்கு புறப்படுவோம் ..மழை துளி விழுது.. ஓடுங்க.. ஓடுங்க.. பஸ்சுக்கு ஓடுங்க.. என்றபடி வேகமாக நடந்தார்.
பூங்கொடி மற்றும் சுடிதார் சுதா.. இளைஞர்கள் தலையில் துணியால் மூடிக்கொண்டு.. ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல ஓட.. கண்ணாயிரமும் தேன்பாட்டிலை தூக்கிக்கொண்டு ஓட.. நிலைதடுமாறி கீழேவிழ பாட்டில் கைதவறி உருண்டு ஓட.. கண்ணாயிரம் மழையை பொருட்படுத்தாமல்.. உருண்ட பாட்டிலை துரத்திக்கொண்டு ஓடினார். மழை சோ என்று கொட்ட ஆரம்பித்தது. ஆனாலும் கண்ணாயிரம் விடவில்லை. மழையில் நனைந்து கொண்டே பின்னால் விரட்டினார். மழை நீர் பெருகி ஓடியதால் தண்ணீரில் பாட்டிலும் உருள.. கண்ணாயிரம் கிரிக்கெட் வீரரைப்போல கீழே உருண்டு.. பாய்ந்து பாட்டிலை பிடிக்க முயல மலை மேலிருந்து கீழே பள்ளமாக இருந்ததால்.. பாட்டிலும் தண்ணீரில் வேகமாக உருள கண்ணாயிரம் குறுக்கேபாய்ந்து பாட்டிலை மடக்க.. அதைப் பார்த்த பூங்கொடி ஏங்க..அதை விட்டுவிட்டு வாங்க.. மழையில் நனையாதீங்க என்று அதட்ட கண்ணாயிரமோ..ம் காசு கொடுத்து வாங்கினது.. விடமாட்டேன் என்றபடி பாய்ந்து தேன் பாட்டிலை பிடித்து தூக்கி..ம் எங்கிட்டே தப்பிக்க பாக்கியா.. நான் எப்படி ஆளு விடுவேனா..என்றவாறு பஸ்சை நோக்கி ஓடினார்.
அவர் உடம்பெல்லாம் சேறும் சகதியுமாக இருந்தது.. அதைப்பார்த்த பூங்கொடி.. என்ன இப்படி இருக்கிய.. சேறும் சகதியோடு உள்ளே பஸ்சுக்குள் வராதீங்க.. உடம்பை நல்லா கழுவிட்டுவாங்க என்க.. கண்ணாயிரமோ..ம்.. இப்பதான் மழையில் நனையாதீங்க.. ஓடி வாங்கன்னு சொன்ன..இப்போ வராதீங்க என்று சொல்லுற.. நான் என்ன செய்யுறது என்று கண்களை கசக்கினார்.
நல்லா குளிச்சிட்டு வாங்க..ஒண்ணும் தப்பே இல்ல.. என்று பூங்கொடி சொல்ல.. கண்ணாயிரம்.. என்ன பூங்கொடி நான் மட்டும் எப்படி மீண்டும் அருவியிலேபோய் குளிக்க முடியும் என்று சிணுங்க.. பூங்கொடியோ ஏங்க.. எப்படியாவது சேறும் சகதியையும் கழுவிட்டுவாங்க என்று அதட்ட.. கண்ணாயிரம் தேன்பாட்டில் பையை பூங்கொடியிடம் கொடுத்துவிட்டு.. அந்திவரும் நேரம்..துள்ளிவரும் மழை..வா..வா என்று பாடியவாறு மழையில் நனைந்து ஆடினார்.

பூங்கொடி..அய்யோ..வாங்க..என்று கத்த இடி சத்தத்தில்அது கண்ணாயிரம் காதில் விழவில்லை.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.