குற்றாலம் அருகே பேன் மருந்தை குடித்த சிறுவன் பலி
1 min read
A boy died after taking lice medicine near Courtalam
13.10.2023
குற்றாலம் அருகே ஆயிரப் பேரியில் பேன் மருந்தை குளிர்பானம் எனக் கருதி குடித்த சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் சரகம் ஆயிரப்பேரி ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் இவர் கூலி தொழிலாளி இவரது மனைவி தனலட்சுமி ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு நான்கு வயதில் இஷ்வந்த் மற்றும் இஷாந்த் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.இவர்களது தாய் தனலட்சுமி வேலைக்கு சென்று விட்ட நிலையில் சிறுவர்கள் இருவரும் வீட்டில் அவர்களது பாட்டி சுடலியுடன் இருந்துள்ளனர்.
அப்போது சிறுவன் இஷ்வந்த் வீட்டில் பேன் மற்றும் பொடுகு நீக்குவதற்காக தலையில் தேய்க்கும் பேன் மருந்தை குளிர் பானம் என தவறுதலாக நினைத்து எடுத்துக் குடித்து விட்டான். இதை பார்த்த இஷாந்த்தும் அதைக் குடித்து உள்ளான். இதனால் இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சிறுவர்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருவரையும் உடனடியாக தென்காசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இஷ்வந்த் உயிர் இழந்தான்.
இது பற்றி தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் விரைந்து வந்து இஷ்வந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மற்றொரு சிறுவனான இஷாந்த் தென்காசி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.