தசரா திருவிழாவையொட்டி பாளையில் அணிவகுத்த 11 அம்மன் சப்பரங்கள்
1 min read
11 Amman Chapparas paraded in Palai on the occasion of Dussehra festival
15/10/2023
தசரா திருவிழாவையொட்டி பாளையில் 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்ற காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
பாளை தரசா
குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக நெல்லை மாநகா் பாளையில் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த விழாவில் 12 அம்மன் சப்பரங்கள் அணிவகுக்க சூரசம்ஹாரம் நடைபெறும்.
11 சப்பரங்கள்
அதன்படி இந்த ஆண்டு தசரா விழாவின் தொடக்கமாக பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து காப்பு கட்டுதல், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவில் பாளையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆயிரத்தம்மன், ஸ்ரீ பேராத்துசெல்வி, ஸ்ரீ தூத்துவாரி முத்தாரம்மன், உச்சினிமாகாளி அம்மன் என 11 கோவில்களில் உற்சவா் அம்மன் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வந்தார்கள்.
ஒரு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் அந்த கோவில் சப்பரம் மட்டும் வரவில்லை. மேலும் வண்ண விளக்குகள் ஜொலிக்க மேளதாளங்கள் முழங்க, ஸ்ரீ ஆயிரத்தம்மன் தலைமையில் 8 ரதவீதிகளிலும் வீதி உலா வந்தனா். சப்பரத்திற்கு முன்பு கொடி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.
பக்தர்களுக்கு காட்சி
தொடர்ந்து இன்று காலையில் ராஜகோபால சுவாமி கோவில் முன்பு 11 சப்பரங்கள் அணிவகுத்து நின்றன. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் அனைத்து சப்பரங்களுக்கும் ஆரத்தி நடைபெற்று தங்கள் கோவில்களுக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.
இன்று முதல் 11 கோவில்களிலும் அடுத்த 9 நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து அம்மன் கொலுவில் வீற்றிருக்கும் வைபவமும் நடக்கிறது. வருகிற விஜயதசமி அன்று 12 சப்பரங்களில் அம்பாள் வீதி உலாவும், அதனை தொடா்ந்து சூரசம்காரமும் நடைபெறுகிறது.
இன்று 11 கோவில்களில் இருந்தும் எவ்வித பிரச்சினையும் இன்று சப்பரங்கள் எடுத்து வரப்பபட்டது. இதற்காக மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் ஆதர்ஷ் பசேரா, சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.