பங்குச்சந்தைகள் கடும் சரிவு- 15 நிமிடங்களில் ரூ.3.5 லட்சம் கோடி இழப்பு
1 min read
Stock markets plummeted – Rs 3.5 lakh crore loss in 15 minutes
26.10.2023
பங்குசந்தைகளில் இன்று திடீர் சரிவு ஏற்பட்டது. இன்று காலை வர்த்தகத்தின்போது 15 நிமிடத்திற்குள் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.3.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பங்குசந்தை
இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்பட்ட தாக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவின் பொருளாதார நிலை போன்ற காரணங்களால் சர்வதேச சந்தைகள் சரிவை சந்திக்கின்றன. இந்த மந்த நிலையானது இந்திய பங்குச்சந்தைகளிலும் பிரதிபலிக்கிறது. கடந்த 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகள்கூட சரிவில் இருந்து தப்பவில்லை. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
6-வது நாளாக இன்றும் பங்குச்சந்தைகள் சரிந்தன. மும்பை பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. 6 நாட்களில் கிட்டத்தட்ட 3000 புள்ளிகள் சரிந்துள்ளன.
டெக் மஹிந்திராவின் வருவாய் குறைவு தொடர்பான அறிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒட்டுமொத்த செயல்திறன் ஆகிய காரணங்களாலும் பங்குச் சந்தைகள் பாதிக்கப்பட்டன.
இன்று காலை வர்த்தகத்தின்போது 15 நிமிடங்களில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.3.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பங்குகள் சரிந்து வருவதால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.