ராணிப்பேட்டை: டோர் டெலிவரி மூலம் கஞ்சா விற்றவர் கைது
1 min readRanipet: Ganja seller arrested through door delivery
30/10/2023
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் போன் செய்தால் வாடிக்கையாளரின் இடத்திற்கே டூவீலரின் சென்று கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
வாலாஜாப்பேட்டை அடுத்த குடிமல்லூர் மேம்பாலம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது வாகனத்தில் 2 கிலோ அளவிலான கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த நபரை பிடித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் ஆற்காடு ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேஷ்(37) என்பதும், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே இரு சக்கர வாகனத்தில் சென்று கஞ்சா சப்ளை செய்து வந்தது யெரியவந்தது. அதுமட்டுமின்றி ஏற்கெனவே இவர் மீது பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதும், 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர் தனது இல்லத்தில் மறைத்து வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்
– செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..