தென்காசியில் முன்னாள் நகராட்சி ஆணையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
1 min readAnti-corruption police raid former municipal commissioner’s house in Tenkasi
5.1.2024
தென்காசியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் அடிப்படையில்
முன்னாள் நகராட்சி ஆணையாளர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தென்காசி, புளியங்குடி நகராட்சியில் கடந்த 2017, 18ம் ஆண்டுகளில் நகராட்சி ஆணையாளராக பவுன்ராஜ் பணியாற்றி வந்தார். அதன் பின் அவர் பணிமாறுதலாகி வால்பாறையில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு வால்பாறை நகராட்சியில் பணியாற்றிய போது 1256 காசோலைகள் மூலம் 15.62 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக பயன் படுத்தியாகவும் மேலும் அங்கு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் மூன்று பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.அதனைத் தொடர்ந்து திருப்பூர் மண்டல நிர்வாக இயக்குநர் சரவணகுமார் வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து இவர் இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து சேர்ந்து உள்ளதாக புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் இதை நீக்கம் செய்யப்பட்டுள்ள நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் சொந்த ஊரான புளியங்குடி அய்யாபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வசிக்கும் வீடு, புளியங்குடியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பங்களா மற்றும் செங்கல் சூளை, தென்காசி மங்கம்மா சாலை பகுதியில் உள்ள அவரின் தாயார் மம்மது பெயரில் உள்ள ஜே.எஸ்.ஆர். கார்மெண்ட்ஸ் எக்ஸ்ஸ்போர்ட் நிறுவனம் ஆகிய இடங்களில் நெல்லை மாவட்ட ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாலசுத்தர் தலைமையில் தென்காசி இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ நெல்லை இன்ஸ்பெக்டர் ராபின்சன் விருதுநகர் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உட்பட 20 போலீசார் மூன்று பிரிவுகளாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு தென்காசி மங்கம்மா சாலை பகுதியில் உள்ள பவுன்ராஜ்க்கு சொந்தமான கார்மெண்ட்ஸ்க்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக அந்த நிறுவனத்தின் முன் பகுதி கதவை உட்புறமாக பூட்டினார்கள். மேலும் உள்ளே இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.அது போல் வெளியில் இருந்து யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த நிறுவனத்தின் பல்வேறு அறைகளில் சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கூறுகையில் கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி ஆணையாளராக பவுன்ராஜ் பணியில் இருந்த போது பல லட்ச ரூபாய் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது அதனை தொடர்ந்து அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். அது தொடர்பான புகாரின் அடிப்படையில் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகிறோம்
இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.