ஆலங்குளம் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.4 லட்சம் நகை கொள்ளை- 6 பேர் கைது
1 min read6 arrested for stealing 4 lakh jewels from Alankulam real estate tycoon
11.1.2024
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூபாய் 4 லட்சம் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற 6 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 50) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவர் தனது தொழில் சம்பந்தமாக ஆலங்குளம் பகுதிக்கு சென்ற போது அடையாளம் தெரியாத 6 நபர்கள் விஜயின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 22 கிராம் தங்கச் செயின், 20 கிராம் கைச்செயின், மேலும் அவரது பைக் பெட்டியில் இருந்த அவரது மகனின் 120 கிராம் வெள்ளிக் கொடி, 18 கிராம் எடையுள்ள இரண்டு வெள்ளி கை செயின், மற்றும் ரொக்கம் 60 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது பற்றி விஜயன் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயனிடம் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற கும்பலை வலை வீசி தேடி வந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த கொள்ளை கும்பலை பிடிக்க தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையில் தனி படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தனிப்படையினர் நேற்று மாலை மாறாந்தை மனுஜோதி ஆசிரமம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த மாறாந்தையை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் சூரிய வசந்தன் (வயது 25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய சூரிய வசந்தனிடம் தீவிர விசாரணை நடத்திய போது ஆலங்குளத்தில் விஜயனிடம் நகை பறித்த சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இவரோடு சேர்ந்த கூட்டாளிகள் ஐந்து பேரையும் அடையாளம் காட்டினார். அதன்படி மாறாந்தை அம்மன் கோவில் கீழத்தெரு சமுத்திரம் என்பவரது மகன் அழகு சுந்தரம் (வயது 32) மாறாந்தை அம்பல வாசகர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து (வயது 24) கல்லிடைக்குறிச்சி மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மகன் சுதாகர்(வயது19) வீரவநல்லூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரது மகன் முருகேசன் (வயது 20) கள்ளத்திகுளம் பகுதியை சார்ந்த மாடசாமி என்பவரது மகன் மகேஷ் (வயது 28) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ரியல் எஸ்டேட் அதிபர் விஜயனிடம் நகைகள் கொள்ளை அடித்ததை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து தங்கம் வெள்ளி மற்றும் நகைகளை போலீசார் மீட்டனர். அதனை தொடர்ந்து ஆறு பேர்களும் ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் அதன்படி 6 பேர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.