அஜ்மீர் தர்காவிற்கு அன்பளிப்பாக சால்வை வழங்கிய பிரதமர் மோடி
1 min read
Modi gifts shawl to Ajmer Dargah
11.1.2024
இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது. ‘கரீப் நவாஸ்’ என அழைக்கப்படும் காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அஜ்மீர் ஷெரீப் தர்காவில் ‘உருஸ்’ என்ற நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்வின்போது காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடத்தின் மீது மலர்ப் போர்வைகளையும், சால்வைகளையும் அணிவிக்கும் மரபினை அங்குள்ள இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, இந்து மக்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடத்தில் சமர்ப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி சால்வையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இன்று இஸ்லாமிய சமூக பிரதிநிதிகளை சந்தித்து, மதிப்பிற்குரிய அஜ்மீர் ஷெரீப் தர்காவில் காஜா மொய்னுதீன் சிஸ்தியின் ‘உருஸ்’ நிகழ்வின்போது வைக்கப்படும் புனித சால்வையை சமர்ப்பித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.