திப்பணம்பட்டியில் பொங்கல் பரிசு ரூ.1,000-த்தை தராததால் தாயை கொலை செய்த மகன்
1 min readSon killed mother for not giving Pongal gift of Rs.1,000
11.1.2024
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சிவந்திப்பூ (வயது 80).
இவரது கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகள்களும், முருகன் (50) என்பவர் உள்பட 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
மூதாட்டி சிவந்திப்பூ புளி குத்தும் வேலைக்கு சென்ற தாகவும், அதன் மூலம் வரும் வருமானத்தையும், முதியோர் உதவித்தொகை மூலம் வரும் வருமானத்தையும் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவரிடம் இருக்கும் பணத்தை கேட்டு அவரது மகன் முருகன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவில் மது போதையில் வந்த முருகன், சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் வீட்டை எழுதி தருமாறும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிய ரூ.1,000 பணத்தை கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு சிவந்திப்பூ மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், தாய் என்றும் பாராமல் சிவந்தி பூவின் கழுத்தை துணியால் இறுக்கியும், வீட்டினுள் கிடந்த அம்மிக்கல் மற்றும் மற்றொரு கல்லை தலையில் போட்டும் கொலை செய்தார்.
இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் உயிரிழந்த சிவந்திப்பூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்த முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.