பாப்பாக்குடி அருகே மனைவி கொலை – கணவனுக்கு ஆயுள் தண்டனை
1 min read
Murder of wife near Tenkasi – Husband sentenced to life:
16.2.2024-
தென்காசி மாவட்டம்
பாப்பாக்குடி அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கணவனுக்கு தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி அருகேயுள்ள அடைச்சாணி கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி என்பவரது மகன் முருகன் (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி கணேசம்மாள் (வயது 30). கணேசம்மாள் கேட்டரிங் வேலைக்கு செல்வது வழக்கம். அப்போது கேட்டரிங் மாஸ்டர் முத்து என்பவருடன் கணேசம்மாள் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முருகேசன் தனது மனைவியிடம் கேட்டு அவரை கண்டித்துள்ளார். இதனால் கணேசம்மாளும், முத்துவும் செல்போனில் முருகனை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து முருகன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மிரட்டிய கணேசம்மாளையும், முத்துவையும் கைது செய்தனர். இந்த வழக்கில் அவ்விருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். ஜாமீன் உத்தரவுபடி காவல் நிலையத்தில் தினமும் கணேசம்மாளும், முத்துவும் கையெழுத்திட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த கடந்த 2017ம் ஆண்டு கணேசம்மாள் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டு விட்டு திரும்பி வரும் போது அவரை முருகன் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.
இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா வழக்கை விசாரணை செய்து மனைவியை கொலை செய்த முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் ஓராண்டு ஒரு மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சு.வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார்.