18 ஆண்டுக்கு முன் நடந்த இரட்டை கொலைவழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை
1 min readA double murder that happened 18 years ago Life imprisonment for 20 people in the case
24.4.2024
உள்ளாட்சித் தேர்தல் மோதல் 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 20 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் குலசேகரன் (வயது 40). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இவருடைய குடும்பத்திற்கும் அதே கிராமத்தைச் சேர்ந்தவரும் திமுக கிளை கழகச் செயலாளராக இருந்தவருமான நக்கீரன் ( 48 ) என்பவர் குடும்பத்திற்கும் அரசு புறம்போக்கு இடத்தை சொந்தம் கொண்டாடுவது சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
மேலும் கடந்த 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நக்கீரனும் அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரும் போட்டியிட்டனர் இத்தேர்தலில் சேகருக்கு ஆதரவாக குலசேகரன் தரப்பினர் செயல்பட்டனர் இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தாலும் இருதரப்பினர் கிடையாது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் குலசேகரன் தரப்பினர் மீது நக்கீரன் தரப்பினருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
அரசு புறம்போக்கு நிலத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு தடையாக இருப்பதோடு தேர்தலிலும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் குலசேகரன் தரப்பினர் கொலை செய்ய நக்கீரன் தரப்பினர் திட்டமிட்டனர். அதன்படி, கடந்த 5.11.2005 அன்று காலை 6:00 மணி அளவில் அதே கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையில் குலசேகரன் டீ குடித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது அங்கு வீச்சரிவால் கொடுவாள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நக்கீரன் தரப்பினர் குலசேகரனை சரமாரியாக வெட்டினார்கள்.
இதைத் தடுக்க வந்த குலசேகரனின் நண்பர் காத்தவராயன் வயது 50 என்பவரின் அவர்கள் சரமரியாக வெட்டினார்கள் இதில் குலசேகரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார் ,பலத்த காயம் அடைந்த காத்தவராயன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார், உடனே நக்கீரன் தரப்பினர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
தகவல் அறிந்து திருமண நல்லூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காத்தவராயன் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர் ஆனால் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்
இந்த கொடூர பயங்கர இரட்டை கொலை குறித்து குலசேகரனின் அண்ணன் திருநாவுக்கரசு திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் நக்கீரன், கோவிந்தசாமி (77), தமிழ்மணி (27), அதிமுக முன்னாள் கிளை கழக பிரதிநிதி சிவ பூஷணம் (54), ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் புகழொந்தி ( 77) ,மணவாளன் (74), ராஜேந்திரன் (64), முருகவேல் ( 52), மார்க்கண்டேயன் (64) ,சுதாகர் (45), பழனிவேல் (38) ,முரளி (43) ,தமிழ்ச்செல்வன் (35) ,அருள் (24), அதிமுக முன்னாள் கிளை மேலவை பிரதிநிதி கனகராஜ் (74), மோகன் (46) ,சிவநாதன் (44) ,பிரபு (44) ,காளி பசுபதி (72) ,அர்ஜுனன் (76), மணி (26), பாரி (49), பார்த்திபன் (44) ,சபரிநாதன் (49), கண்ணன் (64), மாதவன் (49) ஆகிய 26 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அனைவரையும் திருவெண்ணைநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் தமிழ்மணி, பழனிவேல், தமிழ்ச்செல்வன் ,அருள், அர்ஜுனன் ,கண்ணன், ஆகிய 6 பேரும் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தீர்ப்பு கூறப்பட்டது வழக்கு விசாரித்த நீதிபதி ராஜசிம்ம வர்மன் இவ்வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களின் உயிரிழந்த 6 பேரைத் தவிர மற்ற அனைவருமே குற்றவாளிகள் என்று அறிவித்தார்.
மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நக்கீரன், கோவிந்தராஜ் ,சிவ புஷனம், புகழொந்தி, மணவாளன், ராஜேந்திரன், குமரவேல், மார்க்கண்டேயன், சுதாகர், முரளி, கனகராஜ், மோகன் சிவநாதன், பிரபு காளிபாசுபதி,மணி ,பாரி, பார்த்திபன் ,சபரிநாதன் ,மாதவன், ஆகிய 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கொலை செய்யப்பட்ட குணசேகரன், காத்தவராயன், ஆகிய இருவரின் குடும்பத்தாருக்கு தல ஐந்து லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ராஜசிம்மவர்மன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு கடலூரில் உள்ள மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆயுத தண்டனை பெற்றவர்களில் கோவிந்தராஜ் தற்போது வழக்கறிஞராகவும், மோகன் கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் காவலராகவும், சபரிநாதன் பொதுப்பணித்துறையில் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.