சட்டம்-ஒழுங்கு: போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
1 min read
Law and order: M.K.Stal’s consultation with top police officials
9/7/2024
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தமில்லை. உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் தங்களது கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கொலையில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்த நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக மாற்றப்பட்டு புதிய கமிஷனர் நியமனம் செய்யபட்டார்.
இதை தொடர்ந்து இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை முதன்மை செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜூவால்,கூடுதல் காவல் துறை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகர காவல் ஆணையர் சங்கர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை ஒடுக்குவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன,
நேரில் ஆறுதல்
சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றார். அங்கு ஆம்ஸ்ட்ராங் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்குடி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது பொற்கொடி, குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார். அதற்கு ஸ்டாலின், “கொலை வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை நடக்கிறது. குற்றவாளிகள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் “என்றார்.