தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி; முதல் பரிசு 50 ஆயிரம்- அஞ்சல்துறை அறிவிப்பு
1 min read
National Letter Writing Competition; First Prize 50 thousand- Post Office Notification
23/10/2024
இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் பழக்கத்தை பொது மக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் 14 செப்டம்பர் 2024 முதல் 14 டிசம்பர் 2024 வரை தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியினை அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பரிசு வழங்கவும் அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
இது பற்றி கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அஞ்சல் துறை கடிதம் எழுதும் பழக்கத்தை பொது மக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் 14 செப்டம்பர் 2024 முதல் 14 டிசம்பர் 2024 வரை தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியினை அறிவித்துள்ளது. இதன் தலைப்பு “எழுதுவதின் மகிழ்வு: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்” என்பதாகும்.
கடிதத்தினை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதி “முதன்மை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை -600002 என்ற முகவரிக்கு முகவரிக்கு வருகின்ற டிசம்பர் 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். உறையின் மேல் “அஞ்சல் துறை கடிதப்போட்டி என்று தவறாமல் குறிப்பிடவேண்டும்.
இந்த போட்டியானது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தனியாகவும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தனியாகவும் நடைபெறுகிறது. மேலே குறிப்பிட்ட இரு தரப்பினரும் கடிதத்தை உள்நாட்டு கடிதத்திலோ (இன்லேன்ட் லெட்டர்) அல்லது பேப்பரில் எழுதி அதை அஞ்சல் தலை ஒட்டப்பட்ட கடித உறைக்குள் வைத்தோ அனுப்பலாம். கடித உறை பிரிவில் எழுதுவோர் ஏ4 அளவு வெள்ளைத்தாளில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் உள்நாட்டு கடித பிரிவில் எழுதுளோர் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இப்போட்டியில் பங்கு பெறுவோர், கடிதத்தின் உள்பகுதியிக்கு மேல் 1.1.2024 அன்று என் வயது 18க்கு மேல் கீழ் என்று சான்றளிக்கிறேன்” என்ற வாசகத்தை தவறாமல் எழுதி கையெழுத்திட வேண்டும்.
மாநில அளவில் வெற்றிபெறுபவருக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.25000 ம் இரண்டாம் பரிசாக ரூ.10000 ம், மூன்றாம் பரிசாக ரூ.5000ம் வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றிபெறுபவருக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.50000 ம் இரண்டாம் பரிசாக ரூ.25000ம், மூன்றாம் பரிசாக ரூ. 10000 ம் வழங்கப்படும்
கடிதங்களை அனுப்ப கடைசி தேதி 14.12.2024. கடைசி தேதிக்குப் பின் பெறப்படும் தபால்கள் போட்டிக்கு ஏற்க்கப்பட மாட்டாது.
அஞ்சல் துறையில் 14 செப்டம்பர் 2024 முதல் 14 டிசம்பர் 2024 வரை தேசிய அளவிலான இந்த கடித போட்டியில் மாணவ, மாணவியர் அனைவரும் பங்குகொள்ள வேண்டும்.
இவ்வாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ் குமார் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.