அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்றவர்களுடன் முதல்-அமைச்சர் சந்திப்பு
1 min read
Students who topped the All India Vocational Examination met with Chief Minister M.K.Stalin
24.10.2024
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2,877.43 கோடி ரூபாய் செலவில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
தொழிற் பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழிற் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. 2023-2024ம் கல்வியாண்டு தேர்வு 12.08.2024 முதல் 9.09.2024 வரை நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 26,236 அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் மற்றும் 19,097 தனியார் தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் என மொத்தம் 45,333 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
இத்தேர்வில் 24,853 (94.72%) அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், 16,738 (87.64%) தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், என மொத்தம் 41,591 (91.74%) மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே Industrial Robotics, Manufacturing Process Control and Automation, Information Technology உள்ளிட்ட பல்வேறு தொழிற் பிரிவுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 19 அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவியரும் மற்றும் 5 தனியார் தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவியரும் என மொத்தம் தமிழ்நாட்டை சேர்ந்த 29 மாணவ மாணவியர் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
பயிற்றுநர்களுக்கான பயிற்சியில் (CITS) பயிற்சி பெற்ற காட்டுமன்னார் கோவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த பயிற்றுநர் வி.ஸ்வேதா, Welder தொழிற் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். இவ்வாறு, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 29 மாணவ மாணவியரும் மற்றும் 1 பயிற்றுநரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.