வயநாடு தொகுதி எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் பிரியங்கா காந்தி
1 min read
Priyanka Gandhi to take oath as Wayanad MP tomorrow
27.11.2024
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதன்படி காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர். இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23ந் தேதி எண்ணப்பட்டது. இதில் வயநாடு மக்களவை தொகுதியில் லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இந்த மகத்தான வெற்றியை பிரியங்கா காந்தி சாத்தியமாக்கி உள்ளார்.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை டெல்லியில் பிரியங்கா காந்தியிடம் கேரள காங்கிரஸ் தலைவர்கள் இன்று வழங்கினர். இந்த சம்பவத்தின் போது, அவர்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார். அப்போது பிரியங்கா காந்திக்கு ராகுல் காந்தி இனிப்பு வழங்கி உபசரித்தார். தன் மீது நம்பிக்கை வைத்து தனக்கு ஆதரவு அளித்த வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்தார்.