முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு ஜனவரி 25ந் தேதி – அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு
1 min read
Chief Minister’s Aptitude Test on January 25th – Government Examinations Department Announcement
28.11.2024
அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி 25-ம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசுப் பள்ளிகளில் 2024-2025-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்ளுக்கான “தமிழ்நாடு முதல்-அமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 25.01.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2024-2025-ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1,000 மாணாக்கர்கள் (500மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டில் ரூ.10,000/- (ஒரு மாதத்திற்கு ரூ.1000/- என) வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். முதல் தாள் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடைபெறும்.
மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை 30.11.2024 முதல் 09.12.2024 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) சேர்த்து 09.12.2024 -க்குள் மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.