ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்
1 min read
Hemant Soren sworn in as Jharkhand Chief Minister
28.11.2024
ஜார்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நான்கு இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வென்றன. இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தனிப்பெரும் கட்சியாக வென்றது.
இதையடுத்து, ஜார்கண்ட் கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்நிலையில், ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜார்கண்ட் கவர்னர் சந்தோஷ் கங்குவார் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ராஞ்சியில் நடந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தேசிய தலைவர் சிபு சோரன், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 4வது முறையாக ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.