தென் கொரிய அதிபர் பதவி விலக மறுப்பு- பாராளுமன்ற தீர்மானம் மூலம் நீக்க முடிவு
1 min read
South Korean President refuses to resign – Parliament decides to remove him
12/12/2024
தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார்.
பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அவருக்கு எதிரான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. ஆனால் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதற்கிடையே புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதா மீதான வாக்கெடுப்பை நாளை (சனிக்கிழமை) நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் அவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் கட்சியே விரும்புகிறது.
இந்த நிலையில் அதிபர் யூன் சுக் இயோல் தொலைக் காட்சியில் பேசும்போது கூறியதாவது:-
நான் அறிவித்த ராணுவ அவசர நிலை ஆணை என்பது ஆளுகைச் செயலை சார்ந்தது.
இது விசாரணைகளுக்கு உட்பட்டது அல்ல. கிளர்ச்சிக்கு உட்பட்டது அல்ல. என் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். எனக்கு ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை. நாட்டின் அரசாங்கத்தை முடக்குவதற்கும், அரசியலமைப்பு ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் காரணமான சக்திகள் மற்றும் குற்றக் குழுக்களை கொரியா குடியரசின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதைத் தடுக்க நான் இறுதிவரை போராடுவேன்.
எனது ராணுவ அவசர நிலை சட்டம் என்பது எதிர்க்கட்சியிடம் இருந்து ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஆளும் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூன் கூறும் போது, பதவி நீக்கத்துக்கு பதிலாக யூன் சுக் இயோல் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தற்போது ஜனநாயகத்தையும் குடியரசையும் பாதுகாக்க, பதவி நீக்கம் மூலம் அதிபரை வெளியேற்றுவது தான் ஒரே வழியாக உள்ளது என்றார்.
இதனால் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.