பாத்ரூமில் கண்ணாயிரம் கலாட்டா/ நகைச்சுவை கதை /தபசுகுமார்
1 min read
Kannayira in the bathroom/ Comedy story/ Tapasukumar
14.12.2024
கண்ணாயிரம் தாம்பரம் செல்வதற்காக ரெயில் டிக்கெட் எடுக்க புதுவை ரெயில் நிலையத்துக்குச் சென்றார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசையில் நின்ற அவர் மெல்ல மெல்ல டிக்கெட் எடுக்கும் இடத்தை நெருங்கி மூன்றாவது ஆளாக நின்றபோது வேட்டிக்குள் நுழைந்த கட்டெறும்பு இடுப்பு வழியாக ஊர்ந்து முக்கியமானப் பகுதியைக் கடிக்க.. அலறித்துடித்த கண்ணாயிரம் அய்யோ அம்மா என்று கத்தியபடி பாத்ரூமுக்குள் ஓடினார்.
அங்கு வேட்டி-சட்டையை கழற்றி உதறினார். அப்போது பாத்ரூம் கதவை யாரோ தட்ட, யோவ் பொறுமய்யா.. நானே கட்டெறும்பை விரட்டிக்கிட்டு இருக்கைன்.. வேற ரூம்பைப் பாரும் என்று அதட்டினார்.
வேட்டியில் கடித்தபடி இருந்த கட்டெறும்பை எடுத்து வீசினார். அதில் ஒரு எறும்பு அவரது கையைக் கடிக்க.. ஆ..என்ன திமிர் உனக்கு..என்னை டிக்கெட் எடுக்கவிடாம தடுத்ததும் இல்லாம இப்படி வந்து கடிக்கிறீயா.. பதிலுக்கு உன்னை கடிக்க முடியாதுங்கிற நினைப்பு உனக்கு.. விடமாட்டேன் உன்னை என்றவாறு எறும்பைப் பிடுங்கி கீழேப் போட்டு காலால் நசுக்கினார்.
ம்.. இனி கடிப்பியா.. இனி கடிப்பியா.. என்று சொல்லியவாறு நிற்க, மீண்டும் ஒருவர் கதவைத் தட்ட, கண்ணாயிரம் டென்சன் ஆனார். ஏங்க.. நான் எறும்பு பிடிச்சிக்கிட்டு இருக்கேன்.. கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம இருங்க.. என்க.. வெளியே நின்றவர்.. யோவ்.. எவ்வளவு நேரம் உள்ளே இருக்க.. வெளியே போய்யா என்றார்.
கண்ணாயிரம் தவறாகப் புரிந்துகொண்டு, நான் வெளியே போக வரலைய்யா.. என்க, வெளியே நின்றவர், யோவ் வெளியே போகலன்னா.. ஏய்யா உள்ளே போனா.. நான் வெளியே போகணுமய்யா என்க, கண்ணாயிரம்.. நீங்க வெளியேதான நிக்கீங்க.. பிறகு எதுக்கு வெளியே போகணுமுன்னு சொல்லுறீங்க . நான்தான் உள்ளே இருக்கன்.. நான்தான் வெளியேப் போகணும் என்க, வெளியே நின்றவர், வெளியே போகணுமுன்னா சீக்கிரம் வெளியேப் போயிட்டு வாய்யா என்றார்.
கண்ணாயிரம்.. யோவ், நான், கட்டெறும்பு அடிக்க வந்தேன்.. வெளியே வரமாட்டேங்குது என்றார்.
வெளியே நின்றவர், இவ்வளவு நேரமாகியும் வெளியேவர மாட்டேங்குதா.. காலையிலே போகலையா, டிரை பண்ணுங்க சீக்கிரம் என்றார்.
கண்ணாயிரம் என்ன, காலையிலா.. இப்போதான போனேன்.. அதுக்குள்ளே காலையிலே போகலையன்னா கேட்கிறீங்க.. கொஞ்சம் பொறுங்க.. இப்போதான் வேட்டியை விரிச்சிருக்கேன் என்க, வெளியை நின்றவர், வேட்டியை மடக்கி வெளியே போங்க.. என்று சொல்ல, கண்ணாயிரம் திடுக்கிட்டார். வேட்டியை மடக்கிட்டா எப்படி வெளியேப் போகும்..புரியாத ஆளாயிருக்கியய்யா என்று சொல்ல, வெளியே நின்றவர்.. அட..நீரு வேட்டியை மடக்கிட்டு வெளியே போனாலும் சரி, வேட்டியை விரிச்சி வெளியே போனாலும் சரி..சீக்கிரம் வெளியே வந்தா சரி என்றார்.
கண்ணாயிரம், நான் சீக்கிரம் வெளியே வரணுமுன்னுதான் நினைக்கிறேன்.. அது வெளியே வரமாட்டேங்குது. நான் என்ன பண்ணுறது என்றார்.
வெளியில் நின்றவர்,யோவ்..தினம் வாழைப்பழம் சாப்பிடுங்க..அது சீக்கிரம் வெளியே வந்திடும் என்க, கண்ணாயிரம் கோபமானார். என்னய்யா சொல்லுற.. வாழைப்பழம் சாப்பிட்டா அது வெளியே வந்துடுமா.. முட்டாள்தனமா பேசாதய்யா, கட்டெறும்புக்கும் வாழைப்பழத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கு.. வேட்டியை விரிச்சி உதறுனாத்தான் எறும்பு வெளியே வரும்.. வாழைப்பழம் தின்னா வெளியே வருமா.. என்று ஏசினார்.
வெளியே நின்றவர், யோவ், நீ எறும்பு வெளியே வருவதை சொன்னீயா.. நான் வேற எதையோ நினைச்சிட்டேன்.. வேட்டிய எறும்புன்னா..பாத்ரூம் வெளியே நின்னு வேட்டியை கழற்றி உதறவேண்டியதுதானே என்க, கண்ணாயிரம் ஆத்திரத்தில், யோவ் விவரம் தெரியாமப் பேசாதய்யா, நான் அவசரத்திலே இன்னைக்கு ஜட்டி போடாம வந்திட்டேன்.. அப்படியிருக்கும்போது எப்படி வெளியிலே நின்னு வேட்டியை கழற்றி உதற முடியும்.. என்னப் பைத்தியக்காரத்தனமா இருக்கு..கொஞ்சம் நில்லுங்க, இன்னும் இரண்டு எறும்பு இருக்கு எடுத்துவீசிட்டு வெளியே வருகிறேன் என்றார்.
வெளியே நின்றவரிடமிருந்து சத்தம் வரவில்லை. என்ன சத்தத்தைக் காணம் என்றபடி கண்ணாயிரம் கதவை திறந்தபடி ஒரு கையில் வேட்டியை பிடித்தபடி எட்டிப்பார்க்க, வெளியே நின்றவர்.. அம்மாடி என்று மயங்கி விழுந்தார்.
அப்போதுதான் கண்ணாயிரத்தூக்கு தான் வேட்டியை உடுக்காமல் வந்தது நினைவுக்கு வந்தது.(தொடரும்)
-வே.தபசுக்குமார்,புதுவை.